பெரும் எதிர்பார்ப்புடன் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. காலை 7 மணிக்கு தொடங்கியது வாக்கு பதிவு
ஹைதராபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல்கள் போல பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல். இந்த தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்), ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக என 4 முனை போட்டி நிலவுகிறது.
மேலும் தெலுங்குதேசம், இடதுசாரி கட்சிகளும் களத்தில் உள்ளன. 150 வார்டுகளிலும் டி.ஆர்.எஸ். கட்சி போட்டியிடுகிறது. பாஜக 149; காங்கிரஸ் 146; மஜ்லிஸ் கட்சி 51; தெலுங்குதேசம் 106 இடங்களில் போட்டியிடுகின்றன.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். பல ஆண்டுகளாக மஜ்லிஸ் கட்சியின் கூட்டணி வசம் ஹைதராபாத் மாநகராட்சி இருந்து வருகிறது.
இந்த தேர்தலில் இதை முறியடிக்க வேண்டும் என்பதற்காக பாஜக படுதீவிரமான பிரசாரம் செய்தது. தேர்தல் பிரசாரத்தில் பேசிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹைதராபாத் பெயரை பாக்யா நகர் என மாற்றுவோம் என அறிவித்தது பெரும் சர்ச்சையானது. அதேபோல் அமித்ஷாவின் பிரசாரத்தில், ஹைதராபாத்தை நிஜாம் கலாசாரத்தில் இருந்து மீட்போம் என்றார்.
மொத்தம் உள்ள 150 வார்டுகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. கொரோனா பரவல் காலம் என்பதால் இம்முறை வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் 1522 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். மொத்தம் 74,44, 260 பேர் வாக்காளர்கள். இன்று மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு முடிவடையும். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.