"அற்புத சக்தி வேண்டுமா?.. என்னுடன் உறவு வச்சா கிடைக்கும்.." 11 பெண்களை ஏமாற்றிய போலி சாமியார் கைது
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் நலகொண்டாவில் 50 வயது மதிக்கத்தக்க சாமியார் விஷ்வ சைதன்யா சுவாமி பணமோசடி, பெண்களை ஏமாற்றி அவர்களுடன் நெருக்கமாக இருந்ததாக கைது செய்யப்பட்டார்.
நலகொண்டாவை சேர்ந்தவர் விஷ்வ சைதன்யா சுவாமி. இவர் அஜ்மாபூரில் ஸ்ரீ சாய் மான்சி சாரிடபிள் டிரஸ்ட் என்ற ஒன்றை நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக 3 சிஷ்யர்கள் இருந்தனர்.
இவர் 11 பெண்களை ஏமாற்றி அவர்களுடன் உறவு கொண்டதாகவும் பாசிட்டிவ் எனர்ஜியை தருவதாக கூறி பணக்காரர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டார். அவருடன் 3 சிஷ்யர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி, கோவை, தேனியில் 7ஆம் தேதி முதல் கனமழை - வானிலை மையத்தின் ஜில் அறிவிப்பு
17 ஏக்கர் நிலம்
அவர்களிடம் இருந்து 17 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள், 7 லேப்டாப்கள், 4 செல்போன்கள், கார், மூலிகைகள், பிரார்த்தனை செய்யும் பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் தன்னை சாய்பாபா என கூறி பணக்காரர்களை சைதன்யா கவர்ந்திழுத்துள்ளார்.
சாய்பாபா கனவு
மேலும் சாய்பாபா தனது கனவில் வந்ததாகவும் குறிப்பிட்ட பணக்காரர்களிடம் நகை மற்றும் பணத்தை நன்கொடையாக பெறுமாறு தன்னிடம் கூறியதாகவும் அந்த பணக்காரர்களை ஏமாற்றி லட்சக்கணக்கான பணத்தை பறித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள மொஜாம்ஜாஹி மார்க்கெட்டில் எண்ணெய்யையும் சில போலி காட்டு மூலிகைகளையும் தயார் செய்து அவற்றை அதிக விலைக்கு விற்றுள்ளார்.
சடங்குகள்
இவர் அவ்வப்போது பிரார்த்தனைகளையும் சடங்குகளையும் நடத்தி, இவற்றை நடத்தினால் லட்சுமி வாசம் செய்வாள் என கூறியும் தங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்றும் ஏமாற்றியுள்ளார். இவர் தனக்கு 40 நாடுகளில் பக்தர்கள் இருப்பதாகவும் ஏமாற்றியுள்ளார். இவரின் குறி பெண்களாகவே இருந்தது.
11 பெண்களுடன் உறவு
இவர் 11 பெண்களுடன் உறவு கொண்டதாக கூறப்படுகிறது. தன்னுடன் உறவு கொண்டால் அதீத சக்தி கிடைக்கும் என சொல்லி ஏமாற்றியுள்ளார். இவர் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டு நந்திகிராமில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். பின்னர் ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்தார். இங்கு ரூ 1 கோடி வரை கடன் பெற்று விட்டு நல்கொண்டாவுக்கு தப்பி வந்துவிட்டார்.
500 கிராம் தங்கம்
இவர் மீது நம்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவரை 20 நாட்கள் சிறையில் வைத்த காவல் துறையினர் அவரை விடுதலை செய்தனர். இதையடுத்து இவர் முதலில் சாய் சத்சரித்ரா குறித்த போதனைகளை பல்வேறு சேனல்களில் வழங்கினார். இதையடுத்து அதன் மூலம் பிரபலமானதும் தனக்கென யூடியூப் சேனலை தொடங்கி ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை வழங்க தொடங்கினார். இதையடுத்து பணத்திற்காக நேரடியாக பணக்காரர்களை வரவழைத்துள்ளார். சைதன்யாவை கைது செய்த போது 26 லட்சம் ரூபாய் ரொக்கம், 500 கிராம் தங்கம், நிரந்தர வைப்புத் தொகை பத்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளோம் என போலீஸார் தெரிவித்தனர்.
எப்பதான் திருந்துவாங்களோ
இதுபோன்ற சாமியார்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அட்டகாசம் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் கைது செய்யப்பட்டாலும் கூட இவர்கள் புற்றீசல் போல புறப்பட்டு வந்து கொண்டேதான் உள்ளனர். ஆனாலும் இது அடங்கிய பாடில்லை. இதற்கு முக்கியக் காரணம் இவர்கள் மட்டும் இல்லை. மாறாக மக்களும்தான். இதுபோன்ற ஆட்களை நம்பி ஏமாறுவது மக்கள்தான். அவர்கள்தான் சுதாரிப்பாக இருக்க வேண்டும். எல்லா மதத்திலும் இதுபோன்ற போலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாசிட்டிவ் எனர்ஜியை கொடுப்பதாகவும் அதீத சக்தியை கொடுப்பதாகவும் இந்த சாமியார் கூறினால் கேட்பவர்கள் யோசிக்க வேண்டாமா. மேலும் பிறப்பு முதல் இறப்பு வரை என்ன நடக்கும் என்பதை தலையில் எழுதி வைத்தாகிவிட்டது. இதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. ஏன் அந்த கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பது எப்போதுதான் உணர போகிறார்கள் இவர்கள்? காவி உடை அணிந்து கொண்டு மரத்தடியில் இருப்பவர்களையும் மாட மாளிகை வாங்கும் அளவுக்கு இந்த மக்கள் அவர்களை உயர்த்தும் செயல் மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே நம்ப வேண்டும். இடையில் வரும் இதுபோன்ற பிராடுகளை நம்பிப் போனால் நஷ்டம் நமக்குத்தான் என்பதையே இதுபோன்ற சாமியார்களின் கைது சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன.