கொடூரம்.. மதம்விட்டு மதம் காதல்! துடிக்க துடிக்க 20 வயது இளம்பெண் படுகொலை..பெற்றோர் வெறிச்செயல்
ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் மதம்விட்டு மதம் காதல் செய்து மகாராஷ்டிராவுக்கு ஓடிச்சென்ற 20 வயது இளம்பெண்ணை அவரது பெற்றோர் கழுத்து அறுத்து கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நாகல்கொண்டா கிராமத்தை சேர்ந்தவர் தேவிலால். இவரது மனைவி சாவித்ரி பாய். இந்த தம்பதியின் மகள் ராஜேஸ்வரி (வயது 20).
இவர்களின் கிராமத்தில் செய்க் அலிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று காதலை வளர்த்து வந்தனர்.
ஆணவக்கொலை.. மதம்விட்டு மதம் காதல் செய்த தலித் வாலிபர் படுகொலை.. காதலியின் தம்பி வெறிச்செயல்
காதலுக்கு எதிர்ப்பு
இந்நிலையில் தான் அவர்களுடைய காதல் விவகாரம் ராஜேஸ்வரியின் வீட்டுக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காதலை கைவிடும்படி ராஜேஸ்வரியிடம் அவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும் ராஜேஸ்வரி, செய்க் அலிம் உடனான காதலை முறித்து கொள்ளவில்லை.
காதலனுடன் ஓட்டம்
கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு வெளியே சென்ற ராஜேஸ்வரி மீண்டும் வீடு திரும்பிவில்லை. அவரை குடும்பத்தினர் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜேஸ்வரி மாயமானதாக குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேட தொடங்கினர்.
மகாராஷ்டிராவில் மீட்பு
இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் ராஜேஸ்வரி, செய்க் அலிம் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் கிராமத்துக்கு அழைத்து வந்தனர். ராஜேஸ்வரியை குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்த நிலையில் அவரது பெற்றோர் கொடுத்த கடத்தல் புகாரில் செய்க் அலிமை கைது செய்தனர்.
கழுத்து அறுத்து கொலை
இந்நிலையில் தான் நேற்று காலையில் ராஜேஸ்வரிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே காதல் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து பெற்ற மகள் என்று கூட பாராமல் ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்து அவரது பெற்றோர் கொலை செய்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் கைது
மேலும் மகளை கொலை செய்ததால் அவரது பெற்றோரான தேவிலால்-சாவித்ரிபாய் ஆகியோரை கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛ராஜேஸ்வரி மற்றும் செய்க் அலிம் ஆகியோர் திருமணம் செய்துள்ளதாக கூறினர். ஆனால் அதற்கான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை. ராஜேஸ்வரி கொலை தொடர்பாக அவரது பெற்றோரை கைது செய்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.
இதற்கு முன்பு நடந்தது என்ன?
தெலுங்கானா சரூர்நகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லிம் பெண் அஸ்ரின் சுல்தானா என்பவரை கலப்பு திருமணம் செய்த நாகராஜூ ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அஸ்ரின் சுல்தானாவின் சகோதரர் உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தான் தற்போது முஸ்லிம் இளைஞரை காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய இந்து பெண்ணை அவரது பெற்றோர் கழுத்து அறுத்து கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.