இதுதான் பழிக்குபழி.. சந்திரபாபுவின் கோட்டையை சரித்த ரோஜா.. ஆந்திராவின் கேம் சேஞ்சரான கதை!
ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நடிகை ரோஜா மிக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நடிகை ரோஜா மிக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர அரசியலில் மிக குறுகிய காலத்தில் அவர் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளார்.
இந்தியாவின் முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆந்திராவின் புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கதையை கேட்டு அதிர்ந்து போனார். இது ஒரு பழிவாங்கும் சினிமாவிற்கான பக்கா கதை என்று புகழ்ந்தார்.
ஆம் ஆந்திர பிரதேசத்தில் இந்த அரசியல் முடிவுகள் பழிவாங்கும் படலத்தை மையமாக வைத்துதான் இயங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு பேர், தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கு பழிக்கு பழி வாங்கியதுதான் ஆந்திர அரசியலில் தற்போது ஹைலைட்.
ஞான் இப்போ பாட்டு பாடும்.. நீங்க எனக்கு ஓட்டுப் போடணும்.. கில்லி மாதிரி ஜெயித்த ரம்யா!
ஜெகன்
ஒருவர் ஜெகன் மோகன் ரெட்டி. காங்கிரஸ் கட்சி தன்னை அவமானப்படுத்தி, அப்பா ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை அவமானப்படுத்தியது என்று கூறி கட்சியை விட்டு வெளியே சென்றார் ஜெகன். அதன்பின் 10 வருடங்களில் சொல்லி வைத்து அடித்து மேலே வந்தார். அவரின் பழிவாங்கும் பயணம்தான் தற்போது ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்கி இருக்கிறது.
ரோஜா எப்படி
அதே பழிவாங்கும் கதை நடிகை ரோஜாவுடையது. தமிழகத்தில் சாந்தமாக திரைப்படங்களில் நடத்த ரோஜாவிற்கு ஆந்திராவில் ''இன்னொரு பேர் இருக்கிறது''... தனக்கு ஏற்பட்ட சின்ன அவமானத்திற்கு அவர் பழி தீர்க்க புறப்பட்ட அரசியல் பயணம்தான் தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடுவின் கோட்டையை அஸ்திவாரம் கூட இல்லாமல் சரித்துள்ளது.
எப்படி ஆசை
எனக்கு தமிழக முதல்வராக ஆசை என்று ரோஜா ஒரு தமிழ்ப்படத்தில் விவேக்கிடம் சொல்வார். ஆனால் அவருக்கு உண்மையில் ஆசை இருந்தது எல்லாம் ஆந்திர அரசியல் மீதுதான். அப்போது ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மிகவும் வலுவாக இருந்தது. இதனால் 2000ம் ஆண்டு அவர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து பணிகளை கவனித்தார்.
காலம் சென்றது
ஆனால் அவர் கட்சியில் சேர்ந்தாலும், முன்னணி நடிகையாக இருந்தாலும் கூட, அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. காரணம் அவர் பெண்.. அவரது கட்சியில் மிக மோசமாக உட்கட்சி பூசல் நிலவி வந்தது. இதனால் 10 வருடம் கழித்து 2009ல்தான் அவர் சட்டசபை தேர்தலில் நிற்க முடிந்தது. ஆனால் அதிலும் மிக மோசமாக தோல்வியை தழுவினார்.
ஏன் தோல்வி
இவர் தோல்வி அடைய மிக முக்கியமாக காரணம் இருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியில் சந்திரபாபு நாயுடு தொடங்கி யாருமே ரோஜா வளர கூடாது என்று நினைத்தார்கள். இதனால் சீட் கொடுத்தும் கூட, ரோஜாவிற்காக தேர்தல் பணிகளை செய்ய தெலுங்கு தேசம் தொண்டர்களை அனுப்பாமல் இருந்தது. அவரின் தோல்விக்கும் அது பெரிய காரணமாக இருந்தது.
முடிவு செய்தார்
அதன்பின் கட்சியில் ரோஜா பெரிய அளவில் ஓரம்கட்டப்பட்டார். அப்போதுதான் ரோஜா முடிவெடுத்தார்... ''ஆந்திராவில் ரோஜா மலர்ந்தே தீரும்'' என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்தார். ஆனால் போகும் இடமெல்லாம் சொந்த கட்சியினரே கேட் போட்டு தடுத்தனர். அதிர்ச்சி அடைந்த ரோஜா, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.
வெற்றி
ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர அரசியலில் அப்போதுதான் ''பெத்த'' நபராக வளர்ந்து கொண்டு இருந்தார். கட்சி மாறிய சில நாட்களில் ஜெகனின் தளபதியாக மாறினார் ரோஜா. ஜெகனின் பிரச்சார திட்டங்களை கூட வடிவமைக்கும் அளவிற்கு ரோஜா உருவெடுத்தார்.. அவருக்கான அந்த காலம் வந்தது.. வலிமையான மனிதர்கள் வலிமையான இடங்களில் இருந்து வருவார்கள் என்ற வரிக்கு ஏற்றபடி ஜெகன் மோகனின் கோட்டையை வலிமையாக்க தொடங்கினார்.
வெற்றி பெற்றார்
அதன்பின் நடந்த 2014 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றார். அதுவும் சந்திரபாபுவின் சித்தூரிலேயே வெற்றிபெற்றார். சட்டசபை சென்ற ரோஜா.. அங்கு நிகழ்த்தியது எல்லாம் மாயாஜாலம். இவர் என்ன பேசி விடுவார் என்று நினைத்தவர்களின் வாயை அடைத்தார்.. சந்திரபாபுவை கேள்விகளால் துளைத்து, ஜெகனின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.
வாக்கு சதவிகிதம்
நடந்து முடிந்த ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ரோஜா பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் ஜெகன் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மோடியின் பாஜக பிரச்சாரம் கூட இவ்வளவு வெற்றிகரமான பிரச்சாரம் கிடையாது. ரோஜா பிரச்சாரம் செய்த இடங்களில் 97% ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ரோஜாதான் அங்கு கேம் சேஞ்சராக மாறி உள்ளார்.
என்ன சூப்பர்
ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 175 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 88 இடங்களில் வெல்ல வேண்டும். இந்நிலையில் அங்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 22 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை இழந்துள்ளது. அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வென்றுள்ளது. இதனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
அமைச்சர் ஆகிறார்
கட்சிக்கு வெற்றி தேடி தந்ததோடு தற்போது ஆளும்கட்சி எம்எல்ஏவாக சட்டசபைக்கு செல்கிறார் ரோஜா. அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவும் ஜெகன் முடிவெடுத்து இருக்கிறார்... ஒரு புறக்கணிப்பு.. ஒரு அவமானம்.. ஒரே ஒரு ஒரு பழி வாங்கும் கோபம்தான் ரோஜாவை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது!