ஆந்திராவில் நரபலி: 3 பேர் கழுத்தறுத்து கொலை... சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்
ஆந்திரா கோவிலில் மூன்று பேர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். மூவரின் ரத்தமும் சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்டுள்ளதால் இது நரபலியாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசிற்கு எழுந்துள்ளது.
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் பழமையான கோவிலில் பூசாரி உள்பட மூன்று பேர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். அனந்தபூர் மாவட்டம் கோர்திகோடா கிராமத்தில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொலையானவர்களின் ரத்தம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டதால் அது நரபலியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மூவரின் பெயர்கள் சிவராமி ரெட்டி, கடபால கமலம்மா, சத்ய லட்சுமியம்மா என்பதாகும். மூவருமே 70 வயதிற்கு மேற்பட்டவர்கள். இதில் சிவராமி ரெட்டி கோவில் பூசாரியாக இருக்கிறார்.
பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த பழமையான கோவிலில் ஞாயிறு அன்று இரவு மூவருமே கோவில் வளாகத்தில் படுத்திருந்தனர். அப்போது கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் மூவரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர்.
திங்கட்கிழமை காலை கோவிலுக்கு பக்தர்கள் வந்தபோது ரத்த வெள்ளத்தில் மூவரும் சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். போலீசிற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட மூவரின் ரத்தமும் சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மூவரும் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இதில் பூசாரி சிவராமி ரெட்டியின் தலை மற்றும் உடலில் காயங்கள் அதிகம் இருப்பதாக வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது திட்டமிட்ட கொலையா? அல்லது கோவில் கொள்ளை முயற்சியை தடுத்த போது கொல்லப்பட்டார்களா என்றும் விசாரித்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆந்திராவின் பழமை வாய்ந்த கோவிலில் மூன்று வயது மூத்தவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.