ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்
ஹைதராபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 35 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 69 வாக்குச் சாவடிகளுக்கு மறுதேர்தல் டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல்கள் போல பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல். இந்த தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்), ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக என 4 முனை போட்டி நிலவியது.
மேலும் தெலுங்குதேசம், இடதுசாரி கட்சிகளும் களத்தில் உள்ளன. 150 வார்டுகளிலும் டி.ஆர்.எஸ். கட்சி போட்டியிடுகிறது. பாஜக 149; காங்கிரஸ் 146; மஜ்லிஸ் கட்சி 51; தெலுங்குதேசம் 106 இடங்களில் போட்டியிடுகின்றன.
மொத்தம் உள்ள 150 வார்டுகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. கொரோனா பரவல் காலம் என்பதால் இம்முறை வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட்டது. இந்த தேர்தலில் 1522 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். மொத்தம் 74,44, 260 பேர் வாக்காளர்கள். நேற்று மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு முடிவடைந்தது. பதிவான வாக்குகள் வரும் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையர் கூறுகையில் வார்டு எண் 26-இல் உள்ள 69 வாக்குச் சாவடி மையத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் சின்னத்திற்கு பதிலாக மார்க்சிஸ்ட் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
அரசியலுக்கு வராவிட்டால் ரஜினியின் வாழ்வு அஸ்தமனமாகும்.. சகாயத்தை நிறுத்தினால் 51% வாக்கு.. சாமியார்
இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தது. இதனால் மொத்தம் உள்ள 69 வாக்குச் சாவடி மையங்களில் நாளை (டிசம்பர் 3) காலை 7 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மறுதேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட டிசம்பர் 3-ஆம் தேதி மாலை 6 மணி வரை தடை விதிக்கப்படுகிறது என்றார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்குச் சாவடிகளுக்கு நேரடியாகவோ தபால் மூலமாகவோ தங்கள் வாக்குகளை செலுத்தும் வசதி செய்யப்பட்டிருந்தது. கொரோனா இருக்கும் நோயாளிகள் கண்டிப்பாக முகக் கவசம், பேஸ் ஷீல்டு, கையுறை அணிந்தும் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.