ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இடத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழு இன்று ஆய்வு செய்தது.
இந்த என்கவுண்டர் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இதை தொடர்ந்து ஏழு பேர் கொண்ட, உண்மை கண்டறியும் குழுவை, என்கவுண்டர் நடைபெற்ற இடத்துக்கு இன்று அனுப்பி வைத்துள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நாலு பேரின் உடல்களும் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உடல்களை மனித உரிமை ஆணையத்தின் குழு என்று நேரடியாக சென்று ஆய்வு செய்தது.
ஒருபக்கம் மனித உரிமைகள் குழு ஆய்வு நடத்தி கொண்டிருக்கக் கூடிய நிலையில் கூட, சுட்டுக்கொல்லப்பட்ட நால்வர் மீதும், போலீசார் மீது தாக்குதல் நடத்துவதற்காக கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை காவல்துறையினர் புதிதாக பதிவு செய்து உள்ளனர். இன்று ஆய்வு நடத்திய, மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை அந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி
முன்னதாக, நேற்று நிருபர்களிடம் பேசிய என்கவுண்டரில், பலியான சென்னகேசவலு என்பவரின் கர்ப்பிணி மனைவி ரேணுகா, "எத்தனையோ குற்றங்களுக்காக, எத்தனையோ பேர் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் போலீசார் இதேமாதிரி சுட்டுக்கொல்ல வேண்டும். அதுவரை நான் கணவர் சென்னகேசவலு உடலை வாங்க மாட்டேன்" என்று தெரிவித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.