உங்க ஆதார் கார்டு போலி.. இந்திய குடியுரிமையை நிரூபியுங்க.. யுஐடிஏஐ அனுப்பிய ஷாக் கடிதம்
ஹைதராபாத்: உங்கள் ஆதார் அட்டை போலியானது எனவே உங்கள் இந்திய குடியுரிமையை நிரூபியுங்கள் என ஆதார் அட்டை வழங்கும் யுஐடிஏஐ அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்தார் கானுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
ஹைதராபாத்தில் வசிக்கும் சத்தார் கானுக்கு பிப்ரவரி 3 ம் தேதி யுஐடிஏஐ நீங்கள் இந்திய குடிமகன் தானா என்ற கேள்வி எழுப்பி ஒரு கடிதம் அனுப்பியது.
நாட்டில் ஆதார் செயல்படுவதை மேற்பார்வையிடும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அனுப்பிய இந்த கடிதம் விவாதத்தையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலியான ஆதார்
அந்த கடிதத்தில், "இந்திய நாட்டவர் அல்ல என்று புகார் / குற்றச்சாட்டு வந்துள்ளது (, யார் புகார் கொடுத்தார்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை). தவறான வழிமுறைகள் மூலம் ஆதார் அட்டையைப் பெற்றுள்ளீர்கள். தவறான தகவல்கள் மற்றும் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து நீங்கள் ஆதார் அட்டையை பெற்றுள்ளீர்கள்" என யுஐடிஏஐ குற்றம் சாட்டி உள்ளது.
விசாரணைக்கு வாங்க
பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஹைதராபாத்தின் (ரங்காரெட்டி மாவட்டம்) பாலாபூரில் விசாரணை அதிகாரி முன் சத்தார் கான் நேரில் ஆஜராகுமாறு யுஐடிஏஐ சத்தாரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் அவரது இந்திய குடியுரிமையை நிரூபிக்க தேவையான அசல் ஆவணங்களை அன்று வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
எப்படி வந்தீங்க
சத்தர் கான் ஒருவேளை இந்திய நாட்டவர் இல்லையென்றால், அவர் சட்டபூர்வமாக எப்படி இந்திய நாட்டிற்குள் நுழைந்தார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதை அவர் செய்யத் தவறினால், UIDAI ஒரு முடிவை எடுக்கும் என்று அந்த கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|
யார் கொடுத்தது அதிகாரம்
இது குறித்து சத்தர் கானின் வழக்கறிஞர் முசாபெருல்லா கான், செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுபோன்ற எத்தனை கடிதங்களை யுஐடிஏஐ இதுவரை அனுப்பி உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் யுஐடிஏஐ இதற்காக திருமண மண்டபத்தையே புக்கிங் செய்திருக்கிறது.. இதன் பொருள் இன்னும் நிறையபேருக்கு கடிதம் அனுப்பி இருக்கலாம். விசாரணையை அங்கு நடத்தியதால், இன்னும் பலர் வரக்கூடும். யுஐடிஏஐக்கு எதிராக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு விடுக்க விரும்புகிறேன், இந்திய குடிமக்களை வரவழைத்து அவர்களின் குடியுரிமையை கேள்விக்குட்படுத்த யுஐடிஏஐ அதிகாரம் வழங்கியது யார்" இவ்வாறு தெரிவித்தார்.