ஹைதராபாத் மேயர் பதவி பாஜகவை சேர்ந்தவருக்குதான்... அலட்டாமல் அடித்து சொல்லும் அமித்ஷா
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக வார்டுகளில் வெற்றி பெற போராட தேவை இல்லை- பாஜகவுக்குதான் மேயர் பதவி கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒரு மாநில சட்டசபை தேர்தலை போல ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலை பாஜக எதிர்கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பிரசாரம் செய்தனர்.
ஹைதராபாத்துக்கு இன்று வருகை தந்த அமித்ஷா, பாக்யலட்சுமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பின்னர் பாஜகவினரின் ஆராவரமான வரவேற்பை ஏற்றுக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பாஜகவுக்கு முன்னெப்போதும் இல்லாத ஆதரவை தந்து வரும் ஹைதராபாத் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் கொடுத்த ஆதரவை பார்க்கும் போது பாஜகவுக்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும் என்பதற்கெல்லாம் போராடவே வேண்டியதில்லை என்றே தெரிகிறது.
டெல்லியின் எல்லா நுழைவு வாயிலும் விவசாயிகள்.. போராட்டம் உச்சம், அமித்ஷா கோரிக்கை நிராகரிப்பு
மேலும் ஹைதராபாத் மேயர் பதவியை பாஜகவை சேர்ந்தவரே கைப்பற்றுவார் என்கிற நம்பிக்கை உள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தற்போது டிஆர்எஸ், காங்கிரஸ் பிடியில் இருப்பதால் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலிலும் தெலுங்கானா மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்தார்கள்.
ஆகையால் லோக்சபா தேர்தலின் போதே தெலுங்கானா மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்பதை உணர முடிகிறது. இப்போது ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.