கருணை உள்ளம்... கடவுள் இல்லம்... ஏழை எளியோருக்காக சொத்தை விற்று உதவும் தோசாபதி ராமு..!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சொத்தை விற்று ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் தோசாபதி ராமு என்ற இளைஞர்.
நல்ல நேரம் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் இடம்பெற்ற, ஓடி ஓடி உழைக்கனும்.. ஊருக்கெல்லாம் கொடுக்கனும் என்ற பாடலுக்கு ஏற்ப தொண்டு புரிந்து வருகிறார் தோசாபதி ராமு.
தோசாபதி ராமுவின் மனிதநேய சேவையை பாராட்டி அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
நான் ஏதோ நேரடியாக இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை... 13 வயதில் கட்சிக் கொடிப் பிடித்தேன் -ஸ்டாலின்
மனிதநேயம்
ஹைதராபாத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் தோசாபதி ராமு என்ற இளைஞர் தெலுங்கானா மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக திகழ்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும், வேலை வாய்ப்பில்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்ட உள்ளூர் மக்களுக்கும் சிறியளவில் நிவாரணப் பொருட்களை வழங்கத் தொடங்கினார் தோசாபதி ராமு.
இறைவனை காண்போம்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற பேரறிஞர் அண்ணாவின் அமுதமொழிக்கேற்ப ஏழைகளுக்கு உதவுவதால் அவர்களது சிரிப்பின் மூலம் கிடைத்த மனநிம்மதியும், மகிழ்ச்சியும் இன்னும் இன்னும் உதவ வேண்டும் என்ற உத்வேகத்தை தோசாபதி ராமுவுக்கு கொடுத்துள்ளது. இதையடுத்து தனது பி.எஃப். பணம், சேமிப்பு நிதி, உள்ளிட்டவற்றை செலவழித்து ரைஸ் ஏடிஎம் என்ற பெயரில் வறியோருக்காக அரிசி கொடுத்து உதவ தனி மையத்தை நிறுவினார்.
சொந்த நிதி
உதவுவதற்காக மட்டும் இதுவரை 52 லட்சம் ரூபாய் தனது சொந்தப் பணத்தை செல்வழித்துள்ளார் இந்த இளைஞர். கடந்த 2006-ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பிழைப்பதே அரிது என்ற நிலைக்கு சென்ற ராமு காலம் தந்த அதிசயமாக விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார். அப்போது முடிவு செய்த அவர் இந்த சமூகத்திற்கு தமது பங்களிப்பு இருக்க வேண்டும் என நினைத்து ஆண்டு ஊதியத்தில் 70%-ஐ ஊருக்கு ஒதுக்கத் தொடங்கினார்.
உதவிக்காரியம்
ராமுவின் இந்த மனிதநேய சேவைக்கு அவரது மனைவியும் பக்கபலமாக நின்று ஆதரவு தெரிவிக்கிறார். இல்லையென்றால் தன்னால் இந்தளவுக்கு உதவிகள் செய்திருக்க வாய்ப்பே இல்லை என தோசாபதி ராமு கூறுகிறார். இதனிடையே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புதிதாக கட்டி குடிபெயர இருந்த மூன்று அறைகள் கொண்ட வீட்டை விற்று அந்த நிதியை கொண்டு இப்போது உதவிக்காரியங்களை தொடர்ந்து வருகிறார் ராமு.
ராமு விளக்கம்
நிலைமை தான் சகஜநிலைக்கு திரும்பிவிட்டதே இன்னும் எதற்கு இப்படி உதவிகள் என ராமுவை கேட்போருக்கு அவர் அளிக்கும் பதில் இது தான், '' எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக வெளியில் பார்ப்பதற்கு தோன்றலாம், ஆனாலும் உலகில் உதவி தேவைப்படுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்''. அவர்களுக்காக தனது சேவை தொடரும் எனக் கூறியிருக்கிறார்.