தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்
ஹைதராபாத்: தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது சோதனையில் உறுதியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் 7வது இடத்தில் தெலுங்கானா உள்ளது. அங்கு இதுவரை 34,671 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 1269 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் 356 பேர் தெலுங்கானாவில் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்!
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணியாற்றுபவர்ளுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. அந்த மாநிலத்தின் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்திரராஜன் பணியாற்றி வருகிறார். ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனின் மாளிகையில் பணியாற்றி வந்த சுமார் 10 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேணடுகோள் விடுத்துள்ளார்.