பெற்றோர்களே மன்னித்து விடுங்கள் நான் வாழ தகுதியில்லாத வேஸ்ட் - ஐஐடி மாணவனின் தற்கொலை குறிப்பு
ஐதராபாத் ஐஐடியில் மாணவர் ஒருவர் விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது தற்கொலை என்பதால் மாணவர்கள், பெற்றோர்கள் இட
ஐதராபாத்: நாட்டின் உயரிய படிப்பாக கருதப்படும் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. ஐதராபாத் ஐஐடியில் கடந்த பிப்ரவரி மாதம் பிடெக் இறுதியாண்டு படித்த மாணவர் ஒருவர் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த சம்பவத்தின் வடு மறையும் முன்பாக நேற்று மாலையில் எம் டிசைன் இறுதியாண்டு படித்த மாணவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
தனது மனக்கு என்ன படிக்க பிடிக்கும் என்று பெற்றோர்கள் கேட்பதை விட தனது மகன் என்ன படிக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள்தான் தீர்மானிக்கின்றனர். அதுதான் இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம். உயரிய படிப்பாக கருதப்படும் ஐஐடி வளாகத்திற்குள் மகன் சென்று விட்டாலே லைப் செட்டில் ஆகிவிடும் என்று பெற்றோர் நினைத்து லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து ஜேஇஇ கோச்சிங் கிளாஸ் அனுப்பி பாஸ் செய்ய வைத்து சீட் வாங்கித் தருகின்றனர்.
ஐஐடி வளாகத்திற்குள் சென்ற பிறகுதான் தெரிகிறது இது படிக்கும் இடம் மட்டுமல்ல உலக பாலிடிக்ஸ் எல்லாம் இங்குதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு புடிபடுகிறது. ராக்கிங் தொல்லை, சாதி பாகுபாடு தொல்லை என பிற தொல்லைகளைக் கடந்து பாடத்திற்குள் போனால் மண்டை சுற்ற வைக்கும். சரியான மார்க் வாங்க விட்டாலோ ஆரம்பித்து விடும் மன உளைச்சல்.
மாஸ்டர் டிசைனிங் மாணவன்
மார்க் ஆன்ட்ரூ சார்லஸ் என்ற அந்த மாணவன் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் இருந்து டிசைனிங் பிரிவில் மாஸ்டர் டிகிரி படிக்க ஐதராபாத்தில் உள்ள ஐஐடி வளாகத்திற்குள் வந்தார். தனது இறுதி கட்ட பிரசன்டேசனுக்காக தயாரிப்பு பணியில் இருந்த அவருக்கு கடும் மன உளைச்சல். இதை சரியாக கையாளத்தெரியாமல் கடைசியில் தற்கொலைதான் தீர்வு என்று முடிவு செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
உலகத்தில் தோல்வியடைந்து விட்டேன்
கடும் மன உளைச்சல் காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக மாணவரின் தற்கொலை கடிதம் தெரிவிக்கிறது. என்னால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாது. நான் இந்த மதிப்பெண்களை வைத்து எதிர்காலத்தை சரியாக அமைத்துக்கொள்ள முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உலகத்தில் நான் ஒரு தோல்வியாளன் என்றும் எழுதியிருக்கிறார்.
என்னை மிஸ் பண்ணாதீங்க
சில நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ள ஆண்ட்ரூ, என்னை நீங்க மிஸ் பண்ணாதீங்க. உங்களின் அதீத அன்பிற்கு நான் தகுதியானவன் அல்ல. உங்கள் அனைவரையும் நான் விரும்புகிறேன். உங்களை எல்லாம் விட்டு போவதற்கு எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நான் வாழ்க்கையை முடித்துக்கொள்ளவே விரும்புகிறேன்.
பெற்றோர்களுக்கு நன்றி
என்னை பெற்ற வளர்த்து எனக்காக அதிக தியாகம் செய்த பெற்றோர்களுக்கு நன்றி. எனக்காக எவ்வளவோ பண செலவும், தியாகமும் செய்திருக்கிறீர்கள். ஆனால் நான் அதற்கு தகுதியானவன் இல்லை. நான் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத வேஸ்ட் ஆகவிட்டேன் என்று கண்ணீர் மல்க எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் விழுந்திருக்கும் கண்ணீர் துளிகளே அதற்கு சாட்சியாக இருக்கின்றன.
இரங்கல் அறிக்கை
மாணவனின் மரணத்திற்கு ஐஐடி நிர்வாகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஆன்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வதாக நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆறுமாதத்தில் நிகழ்ந்த இரண்டாவது தற்கொலை என்பதால் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆண்ட்ரூவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவனின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தொடரும் தற்கொலைகள்
கடந்த ஜனவரி 31ஆம் தேதி அனிருத் என்ற மாணவர் விடுதி அறையின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பிடெக் மெக்கானிக்கல் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் படித்து வந்த மாணவரின் தற்கொலை மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இப்போது ஆன்ட்ரூவின் மரணமும் மாணவர்களின் மன உளைச்சல் பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது.