காங்கிரஸ் கட்சிக்கு போதாத காலம் போல.. தெலுங்கானாவில் கூண்டோடு கட்சித்தாவும் காங். எம்எல்ஏக்கள்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.அத்துடன் உள்ளாட்சி மன்ற தேர்தலில் பெரிய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அந்த மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர். மொத்தம் உள்ள 18 எம்எல்ஏக்களில் 12 பேர் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு தாவ திட்டமிட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டுஇறுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக உள்ளது. அந்த கட்சியில் தற்போது 18 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தாலும், லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் மொத்தம் உள்ள 17 இடங்களில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 9 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியினர் மிகவும் சோர்ந்து போய் இருந்தனர்.
இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. நேற்று முன்தினம்முடிவுகள் வெளியாகின.இதில் காங்கிரஸ் கட்சி மிகமோசமான தோல்வியை தழுவி உள்ளது. மொத்தம் உள்ள ஜில்லா தலைவர் பதவிகளையும் முதல்வர் கேசிஆர் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கைப்பற்றி உள்ளது. இதேபோல் கேசிஆரின் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு 80 சதவீத இடங்களை உள்ளாட்சி தேர்தலில் வென்றுள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மிகவும்வெறுத்துபோய் உள்ளனர்.இப்படி ஒரு தோல்வியை ஜீரணிக்க முடியாது என்ற கூறிய காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து மொத்தம் உள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்ககளில் 12 பேர் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநில சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்த 12 எம்எல்ஏக்கள் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைத்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 3ல் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் கட்சிதாவுவதால் கட்சி தாவல் சட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில காங்கிரஸ் கட்சி உள்ளது.இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் முடிவால் அக்கட்சி தலைமை கடும் அதிர்ச்சியில் உள்ளது.