32 பேருக்கு எதிர்ப்பு சக்தி.. சோதனையில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி
ஹைதராபாத்: பாரத் பயோடெக் உருவாக்கி வரும் இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் சோதனைகளில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், சோதனையில் பங்கேற்ற 50 பேரில் 32 பேருக்கு தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் முற்றிலும் உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதற்கு கோவேக்சின் என்று பெயரிட்டுள்ளது. இந்த தடுப்பூசியை வரும் ஆகஸ்ட் 15ம்தேதி நாட்டு மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பபட்டது.
ஆனால் மனித சோதனைகள் மற்றும் பக்க விளைவுகள், உற்பத்தி, ஒழுங்கு முறை அனுமதி என பலநடைமுறைகள் இருந்ததால் மருத்துவர்கள் உடனே மருந்தை வெளியிடுவது சாத்தியமில்லை என்று கைவிரித்தனர். எனினும் மனித சோதனைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சோதனை முதல் முறையாக ஜூனில் தொடங்கியது.
ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து மத்திய அரசின் நிபுணர் குழு பரபர கருத்து.. மாநிலங்கள் தனியாக வாங்க தடை
32 பேருக்கு நோய் எதிர்ப்பு
இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசி நாடு முழுவதும் 2வது முறையாக தற்போது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டு வருகிறது., இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பார்ப்பதற்காக போடப்படுகிறது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், சோதனையில் பங்கேற்ற 50 பேரில் 32 பேருக்கு தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவாக்சின் சோதனையில் இது ஒரு புதிய மைல்கல்லாக மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது.
இரண்டு முறை தடுப்பூசி
ஆய்வில் ஈடுபட்ட ஒரு மூத்த மருத்துவர் இதுபற்றி கூறுகையில். "நாங்கள் கட்டம் -1 சோதனைக்கு நடுவில் இருக்கிறோம், இது இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும். பூஸ்டர் அளவை நாங்கள் நிர்வகித்துள்ளதால் இந்த வாரம் முக்கியமானது. நோயாளிகளின் பிபி, இதய துடிப்பு மற்றும் பிற குறியீடுகளை சரிபார்த்து வாரந்தோறும் நோயாளிகளை கண்காணித்து வருகிறோம். அவற்றை கண்காணிக்க டெலிமெடிசின் வசதிகளையும் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். சோதனை கட்டம் -1 இல், 50 நோயாளிகளுக்கும், ஒருவருக்கு தலா இரண்டு முறை தடுப்பூசி போப்பட்டுள்ளது. தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதைப் பார்ப்பதே இதன் நோக்கம்" என்றார்.
தடுப்பூசி எதிர்வினை
ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு மருத்துவர் கூறுகையில், "காய்ச்சல், தடிப்புகள் அல்லது பிற நிலைமைகளைத் தேடுவதே இப்போதைய சிந்தனையாக உள்ளது. ஏனெனில் தடுப்பூசிக்கான எதிர்வினைகள் ஏதேனும் தோன்றலாம். இரண்டாவது கட்ட சோதனையில் , நோயாளிகளுக்கு ஆன்டிபாடிகள் வேலை செய்வதற்கு எத்தனை தடுப்பூசிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும். இந்த கட்டத்தில், நோயாளியின் உடலில் உருவாகும் ஆன்டிபாடி- டைட்டர்ஸ் அல்லது ஆன்டிபாடிகளின் நிலை குறித்து ஆராயப்படும்" என்றார்.
மக்கள் ஆர்வம்
இப்போதைய நிலையில் சோதனையில் பங்கேற்ற 50 பேரில் 32 பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் கிடைத்திருப்பது மருத்துவ ஆராயச்சியாளர்களுக்கு புதிய நம்பிக்கையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் நிலை குறித்து நாட்டு மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.