என்னப்பா இது.. பார்க்கிங் காசெல்லாம் கேட்கறீங்க.. ஷாக்கில் இன்ஃபோசிஸ் ஊழியர்கள்
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களிடம் சட்டவிரோதமாக வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது அம்பலமாகி இருக்கிறது.
ஹைதராபாத்தில் உள்ள போச்சரம் என்ற இடத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஊழியர்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
இருசக்கர வாகனத்திற்கு ரூ.250, காருக்கு ரூ.500 என்ற வீதத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் பார்க்கிங் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை ஊழக்கு எதிரான அமைப்பை சேர்ந்த விஜயன் கோபால் என்பவர் அம்பலபடுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஹைதராபாத் இன்ஃபோசிஸ் அலுவலகம் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் இயங்கி வருகிறது. அரசின் ஏராளமான சலுகைகளை இந்த நிறுவனம் பெற்று வருகிறது. இந்த வளாகத்தில் செயல்படும் அலுவலகங்கள் வாகன நிறுத்துமிடத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்தக்கூடாது என்று சட்டமே உள்ளது.
ஆனால், இன்ஃபோசிஸ் நிறுவனம் சட்ட விரோதமாக ஊழியர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த கட்டணம் சம்பளத்தில் நேரடியாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று விஜயன் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து தி இந்து பத்திரிக்கையிடம் இன்ஃபோசிஸ் செய்தித் தொடர்பாளர் விளக்கம் தெரிவித்துள்ளார். அதில்,"பிடித்தம் செய்யப்படும் தொகையானது ஊழியர்களின் நல அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டு, வாகன நிறுத்துமிடத்தின் பராமரிப்புப் பணிகளுக்காகவும், மேம்பாட்டு பணிகளுக்காகவும் செலவிடப்படுகிறது.
வாகன நிறுத்துமிடத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்தவில்லை. எங்கள் நிறுவன ஊழியர்களின் வாகன நிறுத்துமிடமாகவே பயன்படுத்தி வருகிறோம். தூண்டுதலின் பேரில் இந்த அற்பமான விஷயத்தை சிலர் கையில் எடுத்துள்ளனர்," என்று கூறியுள்ளார்.
ஊழியர்கள் நல அறக்கட்டளையிலிருந்து இதுவரை ஒரு நற்காரியத்திற்கு கூட அந்த பணம் செலவிடப்பட்டதாக தெரியவில்லை என்று அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று, அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களுமே இந்த பார்க்கிங் கட்டண நடைமுறைக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால், ஒழுங்கு நடவடிக்கைக்கு பயந்து இந்த விஷயத்தை வெளிப்படையாக சொல்வதற்கு கூட அவர்கள் தயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹைதராபாத் இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் 20,000 பேர் பணிபுரிவதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இந்த நிலையில், பார்க்கிங் கட்டணமாக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ரூ.85 கோடி வரை பிடித்தம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதே பாணியில் பிற மென்பொருள் நிறுவனங்களும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் இரண்டாவது பெரிய சாஃப்ட்வேர் நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்நிறுவனத்திற்கு பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களிலும், வெளிநாடுகளிலும் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், மிகுந்த லாபகரமான நிறுவனமாகவும் இயங்கி வருகிறது.
ரூ.85,000 கோடி வர்த்தக மதிப்புடைய இந்த நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ரூ.14,000 கோடியை லாபமாக ஈட்டி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்வதற்கு மென்பொருள் பொறியாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.
இந்த நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் ஊழியர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் விஷயம் ஊழியர்களிடமும், பணிக்கு சேர விரும்புவோர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹைதராபாத் கிளை அலுவலகத்தின் மனித ஆற்றலை 20,000 பேரிலிருந்து 40,000 பேராக அதிகரிக்க இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.