பதவியேற்றது ஆந்திர அமைச்சரவை.. வரலாற்றில் முதல் முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்து ஜெகன் அதிரடி!
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திர அரசின் அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு அம்மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் இரு தேர்தல்களிலுமே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 30ஆம் தேதி பதவியேற்றார். அவரது அமைச்சரவை இம்மாதம் 8ஆம் தேதி பதவியேற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று பதவியேற்பு
இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவை இன்று பதவியேற்றது. ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் மொத்தம் 25 எம்எல்ஏக்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
5 சமூகத்தை சேர்ந்தவர்கள்
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்களை நியமித்து உள்ளார். எஸ்சி, எஸ்டி, பிசி, சிறுபான்மையினர், கபு ஆகிய 5 சமூகத்தை சேர்ந்த 5 பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
தலைமைச்செயலகம்
அவர்கள், ராயலசீமா, பிரகஷம், கிருஷ்ணா டெல்டா, கோதாவரி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை அமராவதியில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
சிறப்பு ஏற்பாடுகள்
புதிய அமைச்சர்களுக்கு அம்மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
|
கட்சியில் பதவி நிச்சயம்..
இதனிடையே ஆட்சியில் பதவி வழங்கப்படாதவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்படும் என்றும், நிச்சயம் அனைவருக்கும் பதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.