அரசியலில் அனலை கிளப்பும் ஒய்எஸ் ஷர்மிளா.. தனிக் கட்சி ஆரம்பிக்கும் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி
ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ஓஎஸ்ஆர் ராஜசேகர ரெட்டி மகள் மற்றும் தற்போதைய முதல்வரான ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்எஸ் ஷர்மிளா புதிய கட்சி துவங்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானாவில் அந்த கட்சி முழுமையாக கவனம் செலுத்தும்.. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு எதிராக மிகப் பெரிய சக்தியாக அதை மாற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்று ஆந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
ஷர்மிளா வீடு ஹைதராபாத்தில் தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டுக்கு அருகே தான் இருக்கிறது. இன்று காலை முதல் இந்த வீடு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
வீட்டில் ஆலோசனை
இதற்கு காரணம் ராஜசேகர் ரெட்டியின் ஆதரவாளர்கள் பலரையும் அவர் தனது வீட்டில் வைத்து சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஷர்மிளா. நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக எனது தந்தையின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளுடன் வருங்காலத்தில் ஆலோசனை நடத்த உள்ளேன், என்று தெரிவித்தார்.
ராஜண்ணா ராஜ்யம்
எதற்காக நீங்கள் இந்த ஆய்வு நடத்த வேண்டும் என்று கேட்டதற்கு, தெலுங்கானாவில் ராஜண்ணா ராஜ்ஜியம் நிறுவப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று அவர் தெரிவித்தார். ராஜசேகர ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்தபோது ராஜண்ணா ராஜ்ஜியம் என்று அழைக்கப்பட்டது. அதைத்தான் அவர் குறிப்பிட்டார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்
ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களும் பிரிக்கப்பட்ட பிறகு, தெலுங்கானா பகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சுத்தமாக வலுவில்லாமல் இருக்கிறது. 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதில் போட்டியிடவில்லை. கடந்த லோக்சபா தேர்தலின் போதும் போட்டியிடவில்லை. முழுக்க முழுக்க ஆந்திர மாநிலத்தின் வெற்றியில் மட்டுமே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கவனத்தைக் குவித்து வைத்திருந்தது.
ஆந்திராவில் அரியணை
ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த வியூகத்திற்கு கிடைத்த வெற்றியாகத்தான் ஆந்திர மாநிலத்தில் அந்த கட்சி அரியணையை பிடித்துள்ளது. தற்போது தெலுங்கானா மாநிலத்தை தனது சகோதரி மூலம் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஜெகன்மோகன் ரெட்டி முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
ஒரு கட்சியைத் துவங்கி முழுக்க முழுக்க தெலுங்கானா மாநிலத்தில் கவனத்தை வைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமித்திக்கு போட்டியாக உருவெடுக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் ஆட்சி
2023ம் ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக கட்சியை உருவாக்கி வலுப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 119 தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் 88 தொகுதிகளில் வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அபார பலத்துடன் உள்ளது. சந்திரசேகரராவ் தெலுங்கானா மாநிலத்தின் சக்தி வாய்ந்த தலைவராகவும், மற்றும் அந்த மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.