சிபிஐ விசாரணைக்கு ஓகே.. மோடியை குஷிப்படுத்திய ஜெகன் மோகன் ரெட்டி.. நெருக்கடியில் சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத்: ஆந்திராவில் சிபிஐ விசாரணை நடத்த அனுமதிக்கும் வகையில் அரசாணையை திருத்தி வெளியிட்டுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
கடந்த வருடம், நவம்பர் 8ம் தேதியன்று, அப்போதைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதி்ல், ஆந்திராவில் விசாரணை மற்றும் சோதனைகளை நடத்துவதற்காக மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) கொடுக்கப்பட்ட "பொது ஒப்புதல்" திரும்பப் பெறப்பட்டது.. "1946 ஆம் ஆண்டின் டெல்லி சிறப்பு பொலீஸ் ஸ்தாபனச் சட்டத்தின் பிரிவு 6 ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அரசு இதை செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
முந்தைய ஆந்திர துணை முதல்வர் (உள்துறை அமைச்சர்) என். சின்ன ராஜப்பா, இவ்வாறு ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டபோது அதற்கு விளக்கம் அளித்தார்.
மேற்கு வங்கத்தில் திருப்பம்.. அமித்ஷாவின் வியூகங்களை முறியடிக்க பிரசாந்த் கிஷோருடன் இணைந்த மம்தா
சிபிஐ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
சின்ன ராஜப்பா, கூறுகையில், சிபிஐ விசாரணை செய்யும் உரிமையை ரத்து செய்வதற்கான காரணம், சிபிஐ அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்தான் என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான்,சிபிஐக்கு மீண்டும் விசாரணை அதிகாரத்தை வழங்கியுள்ளது, ஜெகன் மோகன் ரெட்டி அரசு.
ஊழல் குற்றச்சாட்டு
கடந்த மாதம் 30ம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர தலைநகர் அமராவதி கட்டுமானத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு, சிபிஐக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
மோடி-சந்திரபாபு நாயுடு உரசல்
பிரதமர் மோடி, மற்றும் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு நடுவே பெரும் உரசல் இருந்து வருகிறது. லோக்சபா தேர்தலின்போது, 3வது அணியை உருவாக்க சந்திரபாபு நாயுடு, பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் ஆந்திராவில் ஆட்சியை பறிகொடுத்ததோடு, மத்தியிலும் ஆட்சி மாற்றம் உருவாக்க முடியாமல் போனது சந்திரபாபு நாயுடு.
மோடியுடன் நட்பு
இப்போது சிபிஐக்கு சுதந்திரம் கொடுத்துள்ளதன் மூலம் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் மோடி அரசுக்கு நடுவே இணக்கமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி தனது தேர்தல் பிரச்சாரங்களில், மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அவற்றை நிறைவேற்ற மத்திய அரசிடமிருந்து அதிகப்படியான நிதியுதவியை ஜெகன் மோகன் ரெட்டி எதிர்பார்ப்பது இதில் கவனித்தக்க அம்சமாகும்.
மாநில அரசு அனுமதி
டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன சட்டத்தின்கீழ்தான், சிபிஐ இயங்குகிறது. சிபிஐ விசாரணைக்கு, மாநில அரசுகள், அவ்வப்போது அனுமதி வழங்கும் உத்தரவை பிறப்பிப்பது நடைமுறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.