மீண்டும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்
ஹைதராபாத்: மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். ஹைதராபாத்தில் டிசம்பர் மாதம் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளையும் கேசிஆர் செய்து வருகிறார்.
பாஜகவுக்கு எதிரான அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில உரிமைகளை வலியுறுத்தி மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இத்தகைய முயற்சிகள் எதுவும் அடுத்த கட்டத்தை நோக்கியதாகவும் இல்லை. ஆகக்குறைந்தபட்சம் பாஜகவுக்கு எதிரான ஒருங்கிணைந்த தேர்தல் கூட்டணியாகவும் உருவானதும் இல்லை.
இந்நிலையில் அண்மையில் தெலுங்கானா இடைத்தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜகவிடம் தோல்வியைத் தழுவியது. இதனால் முதல்வர் கே. சந்திரசேகரராவ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாஜகவின் இந்த விஸ்வரூபத்தை அனுமதிக்கக் கூடாது என மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறார்.
இதனால் பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு கேசிஆர் ஏற்பாடு செய்து வருகிறார். ஹைதராபாத்தில் டிசம்பர் மாதம் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.