சந்திரபாபு நாயுடுவிற்கு பதிலடி.. ஜெகன்மோகன் ரெட்டி கட்சியுடன், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கூட்டணி
ஹைதராபாத்: தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி தலைவர்களில் ஒருவரும், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகனுமான, கே.டி.ராமா ராவ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், எங்கும், எதிலும் கூட்டணி குறித்த பேச்சுதான் பிரதான இடத்தை பிடித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், காங்கிரஸ் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ள நிலையில், சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சி, ஆந்திராவின், நாயுடுவிடம் முட்டி மோதிக்கொண்டிருக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பக்கம் சாயத் தொடங்கியுள்ளது.
சந்திரசேகரராவின் ஐக்கிய கூட்டணியில் சேருவதற்கு, ஜெகன் மோகன் ரெட்டிக்கும், ராமாராவ் அழைப்புவிடுத்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சந்திரசேகரராவை சட்டசபை தேர்தலில் எதிர்கொண்டார் சந்திரபாபு நாயுடு. இதை மனதில் கொண்டு ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டியுடன் நெருக்கம் காட்டுகிறது தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி.
கடந்த மாதம், சந்திரசேகர ராவ் அளித்த பேட்டியில்கூட, பதில் கிப்ட் ஒன்றை நான் சந்திரபாபு நாயுடுவிற்கு வழங்கப்போகிறேன் என்று கூறியிருந்தார், சந்திரசேகர ராவ். அந்த பதில் பரிசு இதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சி ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரினாமுல் காங்கிரசை தங்கள் கூட்டணியில் சேர்க்க முயன்று வருகிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயகர், மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடா, திமுக தலைவர் ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும், தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சி தலைவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.