இன்னொரு அநியாயம்.. பசிக் கொடுமை.. வெடிகுண்டை கடித்த பசு.. வாய் கிழிந்து போன பரிதாபம்!
ஆந்திராவில் குண்டு வெடித்ததில் பசு மாட்டின் வாயில் படுகாயம் ஏற்பட்டது
ஹைதராபாத்: பசிக்காக சாப்பிட சென்றபோது, வெடிகுண்டு வெடித்து பசுமாட்டின் வாய் பகுதி கிழிந்து தொங்கிவிட்டது.. ரத்தம் வழிந்தபடியே உள்ள நிலையில், அந்த மாட்டினால் எதையுமே சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. இந்த பசுமாட்டுக்கு வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்று ஆந்திர போலீசார் தேடி வருகிறார்கள்.
கேரளாவில் யானை வெடி வைத்து கொன்ற விவகாரம் அடுத்து என்ன ஆனது என்றே தெரியவில்லை.. முதலில் அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து நிரப்பி வைத்ததாக சொன்னார்கள், விசாரணைக்கு பிறகு தேங்காய்தான் வெடித்தது என்கிறார்கள்.
இந்த சம்பவத்துக்கு பிறகு இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் ஒரு பசுவுக்கு வெடி வைத்தனர்.. அந்த பசு ஒரு கர்ப்பிணி.. பசிக்காக வந்து கோதுமை மாவை சாப்பிட்டுள்ளது.. அதை சாப்பிட்டதுமே பசுவின் வாய் வெடித்து ரத்தம் கொட்ட தொடங்கி உள்ளது.
இதையடுத்து, நம் ஊரில் திருச்சியில் வெடி வைத்து ஒரு நரியை வேட்டையாடினார்கள்.. அதேபோல, வேலூரில் சினை பசு ஒன்று, பசிக்காக புல்லை சாப்பிட வந்தபோது, வெடி குண்டு வெடித்ததில், அந்த பசுவின் வாய் சிதறிவிட்டது.. அதன் வாய் முழுதும் ரத்தம் கொட்டி சதை தொங்கியேவிட்டது.
இப்போது இன்னொரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.. சித்தூர் மாவட்டத்தில் பஞ்சனி என்னும் பகுதி உள்ளது.. இங்கு பசு மாடு ஒன்று மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது அங்கு இருந்த பொருளை சாப்பிட சென்றுள்ளது.. அது வெடிகுண்டு என்று தெரியாமல் கடித்து விட்டது.. இதில் அதன் வாய் பகுதி சிதைந்து கிழிந்து தொங்கிவிட்டது.
விற்பனைக்கு வரும் பதஞ்சலி மருந்து.. 7 நாட்களில் கொரோனாவுக்கு 100% தீர்வு.. அடம் பிடிக்கும் ராம்தேவ்
மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வாயில் ரத்தத்துடன் அந்த மாடு வீடு திரும்பியது.. அதை பார்த்ததும் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேய்ச்சலுக்கு மாடு வரும் என்று தெரிந்தும், வெடிகுண்டை அங்கே வைத்தவர்கள் யார் என்று தேடி வருகிறார்கள்.. பாவம், அந்த பசுவுக்கு எதையும் சாப்பிட முடியவில்லை. வாய் முழுதுமாக சிதைந்து ரத்தம் வழிந்தபடியே உள்ளது.