ஒன்றரை பாட்டில் விஸ்கி.. கூல்ட்ரிங்சில் கலந்து.. வாயில் ஊற்றி.. பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை
ஹைதராபாத்: 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்யப்பட்ட, ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் கொலை வழக்கில் மற்றொரு முக்கியமான துப்பு போலீசாருக்கு கிடைத்துள்ளது.
கொலையாளிகள், பெண் மருத்துவருக்கு வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷம்ஷாபாத் டோல் பிளாசாவுக்கு அருகே, ஹைதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வைத்து, 2 தினங்கள் முன்பு, இரவு பெண் மருத்துவர், லாரி டிரைவர்கள், நடத்துனர்கள் என மொத்தம் நால்வரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.
4 பேர் கைது
இந்த பகீர் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான முகமது ஆரீப், அவரது கூட்டாளிகள், ஜொல்லு சிவா, ஜொலு நவீன் மற்றும் சிந்தகுந்தா சென்னகேசவலு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது. இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று, பெண் மருத்துவருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
விஸ்கி
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், குற்றவாளிகள் விஸ்கி பாட்டிலை வாங்கி, அதை குளிர் பானத்தில் கலந்து, பெண் மருத்துவரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர். அவர் குடித்து நிலைதடுமாறியதும்தான், பலாத்காரம் செய்ய தொடங்கியுள்ளனர். ஷம்ஷாபாத் டோல் பிளாசாவுக்கு அருகிலுள்ள டோண்டுபள்ளி கிராமத்தில் இருந்து, குற்றவாளிகள், ஒன்றரை பாட்டில் விஸ்கி, சில ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் குளிர் பானம் வாங்கியதாக தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பலாத்காரம் செய்த நேரத்தில் குடிபோதையில் இருந்துள்ளனர்.
மூச்சு திணறல்
"அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தபோது வாய் மற்றும் மூக்கை மூடியுள்ளனர். அதனால் மூச்சு திணறி, பிரியங்கா இறந்தார்" என்று சைபராபாத் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். இதன்பிறகுதான், பெட்ரோல் வாங்கி சென்று, பெண் உடலை எரித்துள்ளனர். இந்த படுபாதகத்தை செய்த பிறகு, முகமது ஆரீப், மற்ற குற்றவாளிகளை அரம்கர் எக்ஸ் சாலை அருகே இறக்கிவிட்டு, நாராயன்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
லாரி
போலீஸ் விசாரணையின் போது, டோல் பிளாசா ஊழியர்கள் திறந்த வெளி பிளாட் அருகே ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருந்ததை தெரிவித்திருந்தனர். ராஜேந்திரநகரத்தைச் சேர்ந்த சீனிவாஸ் ரெட்டிதான், லாரி உரிமையாளர் என்பதை போலீசார் கண்டுபிடித்து, அவரிடம் விசாரித்தபோதுதான், முகமது ஆரிப் தனது டிரைவராக வேலை பார்த்த தகவலை தெரிவித்தார். இதையடுத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். பெண் மருத்துவரின் ஸ்கூட்டர் டோல்பிளாசாவிலுள்ளோருக்கும், மெயின் ரோட்டில் செல்வோருக்கும், தெரிந்துவிட கூடாது என்பதற்காக தங்கள் லாரியை வேண்டுமென்றே குறுக்கே நிறுத்தி வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.