காட்டு பகுதி.. இருட்டு வேற.. மொத்தம் 3 நாள்.. 1400 கி.மீ.. தாய்மைக்கு மிஞ்சிய சக்தி உண்டா?
1400 கிமீ பயணம் செய்து மகனை ஸ்கூட்டியில் அழைத்து வந்துள்ளார் தாய்
ஹைதராபாத்: "ரோட்டில் யாருமே இல்லை.. இருட்டு வேற.. காடுகள் இருந்தன.. ஆனாலும் நான் பயப்படவே இல்லை.. கையில் இருந்த சப்பாத்தியை மட்டும் அப்பப்போ சாப்பிட்டுக்கிட்டேன்.. என் ஒரே குறிக்கோள் என் பையனை பத்திரமாக அழைத்து வர வேண்டும் என்பதுதான்" என்று சொல்கிறார் 48 வயது ரெஜியா பேகம்.. மொத்தம் 3 நாட்கள்.. கிட்டத்தட்ட 1,400 கிலோ மீட்டர் டூவீலரிலேயே பயணித்து ஊரடங்கால் சிக்கி தவித்த மகனை அழைத்து வந்துள்ளார் ரெஜியா! இந்த பாச செயலுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ளது போதா நகர்.. இங்கு வசித்து வருபவர் ரெஜியா பேகம். 48 வயதாகிறது.. கணவனை இழந்தவர்.
15 வருஷங்களாக தன்னுடைய 2 மகன்களையும் தன்னந்தனி ஆளாக படித்து ஆளாக்கினார்.. மூத்த மகன் என்ஜினியரிங் படித்துள்ளார்.. 2வது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த அளவுக்கு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க ரெஜியாவுக்கு பேருதவியாக இருக்க காரணம் இவரது படிப்பு, செய்து வரும் பணி... இவர் ஒரு பள்ளி தலைமை ஆசிரியை!!
நெல்லூர்
இவரது 2வது மகன் நிஜாமுதீன் கடந்த மாதம் 12 -ம் தேதி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ரஹ்மதாபாத் என்ற ஊரில் சிக்கி கொண்டார்... தன்னுடைய நண்பன் வீடு அந்த ஊரில்தான் உள்ளது.. அவரது அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்ற தகவல் வரவும், நண்பனை அவரது ஊரில் விட்டு வரலாம் என்று உடன் சென்றவர்... இந்த சமயத்தில்தான் லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அதனால் நிஜாமுதீன் நெல்லூரிலேயே சிக்கிக்கொண்டார். அங்கிருந்து ஊர் திரும்ப எந்த போக்குவரத்து வசதியும் இல்லை.. எப்படி எப்படியோ முயற்சிகளை மேற்கொண்டு ஊர் வந்துவிடலாம் என்று நினைத்தாலும் ஒன்றும் பலனளிக்கவில்லை.
போலீஸ்
அதேசமயம் நிலைமையை நன்கு உணர்ந்த ரெஜியா, மகனை அழைத்து கொண்டு வரலாம் என முடிவு செய்தார்.. யாரை அனுப்பலாம் என யோசித்தார்.. ஆனால் யாரை அனுப்பினாலும் போலீசார் வழியில் உள்ளதால் சிக்கல் ஏற்படும் என நினைத்து, தானே டூவீலர் எடுத்து கொண்டு கிளம்ப தயாரானார். இதற்காக ரஜியா பேகம், போலீஸ் துணை ஆணையரிடம் மகன் அந்த ஊரில் சிக்கி கொண்ட விவரத்தை எடுத்து சொல்லியதுடன், அவரை அழைத்து வருவதற்கான அனுமதி கடிதத்தையும் பெற்று கொண்டார்.
கடிதம்
அந்த கடிதம் ஒன்றுதான் ஒரே பிடிப்பு.. அதை வைத்து கொண்டு டூவீலரில் நம்பிக்கையுடன் பயணமானார் ரெஜியா.. கடந்த திங்கட்கிழமை காலையில் ஆரம்பிம்பித்த பயணம், அன்று இரவும் கடந்து பொழுதும்த விடிந்து தொடர்ந்தது.. மறுநாள் மகன் இருக்கும் ஊரை சென்றடைந்த அடுத்த சில மணி நேரத்திலேயே மகனை அழைத்துக்கொண்டு ஊர் திரும்பினார்.
3 நாட்கள்
திரும்பவும் ஒரு பகல், ஒரு இரவு என முடிந்து புதன்கிழமை சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தார் ரெஜியா.. மொத்தம் இவர் டூவீலரில் சென்றது கிட்டத்தட்ட 1,400 கிலோ மீட்டர்.. மொத்தமாக 3 நாட்கள்.. தாய் பாசத்துக்கு, நாள் கிழமை என்ற கணக்கு தெரியுமா? கிலோ மீட்டர்கள் கணக்கு தான் தெரியுமா?
மறுப்பு இல்லை
இதை பற்றி ரெஜியா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சொல்லும்போது, "ஒரு டூவீலரில் இவ்வளவு பெரிய பயணம் ரிஸ்க்தான்.. ஆனால் பையனை எப்படியாவது பாதுகாப்பாக கூட்டிட்டு வந்துவிட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.. போலீசார் இடையில் வழிமறித்தபோது என்னிடம் இருந்த கடிதத்தை காட்டினேன்.. மறுப்பே சொல்லாமல் அனுமதித்தனர்.
சப்பாத்தி
வழியில் சாப்பாடு இருக்காது என்பது தெரியும்.. அதனால்தான் வீட்டிலேயே சப்பாத்தி ரெடி பண்ணி எடுத்துட்டு போனே.. பசிக்கும்போது வண்டியை நிறுத்திட்டு சாப்பிடுவேன்.. உடனே டூவீலரை கிளப்பி கொண்டு போவேன்.. நைட் நேரத்தில் கொஞ்சம் பயமா இருந்தது.. ஏன்னா, ஊரடங்கு இருக்கு.. ரோட்டில் மக்கள் நடமாட்டமும் இல்லை.. எந்த வண்டிகளும் இல்லை.. காலியான ரோட்டில் வண்டியை ஓட்டி செல்ல மட்டும் பயந்தேன்.. நடுநடுவே காடுகளும் இருந்தன.. " என்றார்.
தாய்மைக்கு மிஞ்சின சக்தி எதுவுமே இல்லை என்பதுதான் யுகம் யுகமாக நடந்து வரும் அதிசயம்.. விலைமதிக்க முடியாத, யாராலும், எதனாலும் வெல்லவும் முடியாத இந்த தாய் பாசத்துக்கு, இந்த அரக்கன் கொரோனா மட்டும் என்ன விதிவிலக்கா?