ஏம்ப்பா.. முத்தலாக் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா.. கணவர் செயலால் அதிர்ச்சி
ஹைதராபாத்: பற்கள் கோணலாக இருப்பதாக கூறி தன்னை கணவர் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டதாக ஹைதரபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஹைதராபாத்தின் குஷாய்குடா பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா இவரது மனைவி ருக்ஷ்னா பேகம். இவர்களுக்கு கடந்த ஜுன் மாதம் 27ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே முஸ்தா குடும்பம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.
இதை பொறுத்துக்கொண்டு வாழ்ந்து வந்த ருக்ஷ்னா பேகத்தை அவரது பற்கள் கோணலாக இருப்பதாக கூறி அவரது கணவர் முஸ்தபா கடந்த மாதம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தாராம்.
முத்தலாக் வழக்கு
இதனால் அதிர்ச்சி அடைந்த பேகம், ஹைதராபாத் குஷாய்குடா காவல் நிலையத்தில் தனது கணவர் முஸ்தபா மற்றும் மாமியார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், மூன்று முறை தலாக் கொடுத்தாகவும் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று முஸ்தா மற்றும் அவரது தாயார் மீது வரதட்சணை கொடுமை மற்றும் முத்தலாக் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்
கூடுதல் வரதட்சணை
இது தொடர்பாக கணவனால் பாதிக்கப்பட்ட ருக்ஷ்னா பேகம் கூறுகையில், எங்கள் திருமணத்தின் போது முஸ்தா மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் மற்றும் நகை என நிறைய வரதட்சணை கேட்டிருந்தனர். எங்கள் குடும்பத்தினரும் அதை நிறைவேற்றி இருந்தார்கள். எனினும் இன்னும் கூடுதல் தங்கம் மற்றும் பணம் வாங்கி வருமாறு எனது கணவரும் மாமியாரும் கொடுமைப்படுத்த தொடங்கினார்கள். என் சகோதரரின் ஒரு பைக்கை கூட அவர்கள் பறித்துக் கொண்டார்கள்.
வீட்டில் அடைத்தனர்
அவர்கள் என்னை தொடர்ந்து சித்ரவதை செய்த வந்தார்கள். கடைசியில் என் கணவர் முஸ்தபா என் பற்கள் கோரமாக இருப்பதாக கூறி என்னை விரும்பவில்லை என்றும் என்னுடன் வாழ விரும்பவில்லை என்றும் கூறினார். என் மாமியார் என்னை 10, 15 நாட்கள் வீட்டுக்குள்ளே பூட்டி அடைத்து வைத்தார்.
எங்கள் வீட்டில்
எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவர்கள் என்னை என் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். இதனால் எங்கள் பகுதி காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். இதையடுத்து எனது மாமியார் குடும்பத்தினர் சமாதானமாக செல்ல ஒப்புக்கொண்டனர். அவர்கள் என்னை திரும்ப அழைத்துச் செல்வார்கள் என காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அக்டோபர் 1ம் தேதி என் கணவர் முஸ்தபா எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச் செல்ல மாட்டேன் என்று கூறினார். என் பெற்றோரையும் கேவலமாக பேசினார். மூன்று முறை தலாக் என்று உச்சரித்தார்.
போலீசில் புகார்
அக்டோபர் 12ம் தேதி என் கணவர் முஸ்தபாவை மீண்டும் தொடர்பு கொண்டேன். அப்போது அவர் மீண்டும் தலாக் தலாக் தலாக் என மூன்று முறை உச்சரித்தார்.இதையடுத்து அக்டோபர் 26ம் தேதி நான் என் கணவர் மற்றும மாமியார் மீது முத்தலாக் கூறியதற்காகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காகவும் அவர்கள் மீது போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனக்கு இந்த வழக்கில் நீதி வேண்டும்" என்று பேகம் கூறினார்.