நாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை
Recommended Video
ஹைதராபாத்: பிரபல நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு இருந்தது பற்றி தெலுங்கானா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டத்தில் சாத் நகர் அருகே பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் 40 ஏக்கரில் விளை நிலம் ஒன்றை நடிகர் நாகார்ஜூனா அண்மையில் தான் வாங்கியிருந்தார். இந்த விளை நிலத்தை இந்த மாதம் முதல் வாரத்தில் தான் நாகார்ஜூனாவின் மனைவியான நடிகை அமலா பார்வையிட்டு இருந்தார்.
அங்கு இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளதா என மண்ணின் தன்மையை அறிவதற்காக நிபுணர் குழுவினை நாகர்ஜூனா குடும்பம் கடந்த புதன்கிழமை அனுப்பி வைத்தது.
அந்தக் குழு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. எங்கிருந்து வருகிறது என்பதை அறிய தேடிய போது பழைய பொருட்கள் அறையில் தான் இந்த துர்நாற்றம் வருவதை அறிந்து அதை திறந்தனர். அங்கு மனித எலும்புக் கூடு கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு சென்ற போலீசார் எலும்புக் கூட்டை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 35 வயது மதிக்கத்தக்கதாகக் கருதப்படும் நபர், 6 மாதத்திற்கு முன் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவர் டீ சர்ட் மற்றும் பேண்ட் அணிந்திருக்கிறார். உயிரிழந்த நபர் யார் , அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மிகமோசமான நிலையில் உடல் இருப்பதால் அந்த பகுதியிலேயே போலீசார் பிரேத பரிசோதனை செய்தனர்.