தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்... 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி!
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து, கூட்டணி அமைத்து, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வர் ஆனார். ஆனால், அதன் பின் காங்கிரஸ் கட்சியின் வியூகம், வெற்றி பெற தவறியது.
இந்தநிலையில், தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணி அமைத்து களத்தில் இறங்கி உள்ளது. பாஜகவும் பல்வேறு உக்திகளை செயல்படுத்தி வருகிறது. ஆனால், கருத்துக்கணிப்புகள் அனைத்திலும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார் முகமது அசாருதீன். இந்த நிலையில், அவர் விருப்பப்படி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக நியமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளில உள்ளவர்கள் சில மாநிலங்களில் அக்கட்சியின் உள்விவகாரங்களை கவனிக்கும் மேலிட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2009 மக்களவைத் தேர்தலின் போது, உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அசாருதீன் வெற்றி பெற்றார். அதே போல், 2014-ஆம் ஆண்டு ராஜஸ்தான் டோங்க்-சவாய் மாதோபூர் தொகுதியில் காங்கிரசில் டிக்கட் வாங்கி போட்டியிட்ட அசாருதீன் தோல்வியடைந்தார்.தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.