கம்ப்யூட்டர் இன்ஜினியரை காய்கறி விற்க வைத்துவிட்டதே கொரோனா.. அசரவில்லை சாரதா.. சபாஷ்
ஹைதராபாத்: கொரோனா நோய் பாதிப்பு காலம் பலரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது. நினைத்து பார்க்க முடியாத வாழ்க்கைக்கு பலரை தள்ளியுள்ளது. அப்படியாக, கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி பொருளாதார ஆழி பேரலையில் மாட்டிக்கொண்டு பணியை இழந்தவர்களில் ஒருவர் தான் ஹைதராபாத் நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண் உன்னாதி சாரதா.
கை நிறைய சம்பளம்.. சாப்ட்வேர் இன்ஜினியர் என்ற பெருமிதத்துடன் வலம் வந்த இவரை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் மகிழ்ச்சி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் வந்தது இந்த கொரோனா நோய் பரவல். உலகம் முழுக்கவே இதன் பாதிப்பு காரணமாக வியாபாரம் படுத்து இருக்கும் சூழ்நிலையில் இவர் பணியாற்றிய மென்பொருள் நிறுவனம் சாரதாவை பணியில் இருந்து நீக்கியுள்ளது. வாழ்வாதாரத்துக்கு என்ன செய்ய என்று யோசித்த இவர் ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் ஒரு காய்கறி கடையை துவங்கிவிட்டார்.
இந்தியாவில் 15 லட்சம் பேரை நெருங்கிய கொரோனா - உலக அளவில் வேகமாக பரவுகிறது
காய்கறி விற்பனை
இதை கடை என்று கூட சொல்லமுடியாது. பிளாட்பாரத்தின் மீது காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். இது பற்றி அவர் என்ன சொல்கிறார் பாருங்கள். வீணான கவுரவத்தில் சிக்கிக் கொண்டு வாழ்க்கையை இழக்காமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசிப்பது புத்திசாலித்தனம். இந்த உலகில் அடுத்தவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தாத எந்த ஒரு தொழிலும் அவமானத்திற்குரியது கிடையாது. எனது சொந்த உழைப்பில் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
வாழ்வாதாரம்
அதிகாலை 4 மணிக்கு நான் எழுந்து கொள்கிறேன். மொத்த காய்கறி சந்தைக்கு சென்று பின்னர் அதை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறேன். தினமும் 12 மணி நேரம் வேலை பார்க்கிறேன். எனது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கிறார் சாரதா பெருமிதத்துடன்.
எம்என்சி கம்பெனி
3 மாதத்துக்கு முன்புதான் ஹைதராபாத்தில் உள்ள ஒரு எம்என்சி கம்பெனியில் சாரதா பணிக்கு சேர்ந்துள்ளார். ஆனால், அதற்குள்ளாக அவரது வாழ்க்கை முறை இப்படி மாறியுள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், பாதி சம்பளத்தை கூட கொடுப்பதற்கு அந்த கம்பெனியால் முடியவில்லை. எந்த ஒரு ப்ராஜெக்ட்டும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவேதான் அந்த பணியிலிருந்து விலக வேண்டியதாயிற்று.
எல்லாம் ஒன்றுதான்
காய்கறி விற்பனை செய்வதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தை கொண்டு வீட்டு வாடகை செலுத்த முடிகிறது, குடும்பத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது. கடின உழைப்பால் கௌரவத்தோடு வாழ்கிறோம் என்கிறார் அவர். வாராங்கல் மாவட்டத்தை சேர்ந்த சாரதா கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்வியில் பட்டப்படிப்பு முடித்தவர். டெல்லியில் ஒரு வருடமாக அனலைசிஸ் பணியில் இருந்துள்ளார். சொந்தமாக ப்ராஜெக்ட் துவங்க வேண்டும் என்று கூட திட்டம் இருந்துள்ளது. ஆனால் போதிய அளவு நிதி இல்லாத காரணத்தால், ஒரு ஐடி கம்பெனியில் அவர் பணியில் சேர்ந்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினியர் என்றால் என்ன? காய்கறி விற்பவர் என்றால் என்ன? அனைத்தும் ஒரே மாதிரியான தொழில்தான் என்பதை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டு இருக்கிறார் சாரதா.