ஜெகன் மோகன் ரெட்டியும், சீனிவாசனும் சேர்ந்து செய்த பெரும் முறைகேடு.. விடமுடியாது: அமலாக்கத்துறை
ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) முன்னாள் தலைவரும், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநருமான என்.சீனிவாசன், ஆந்திர முதல்வர், ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின், நிறுவனங்களில் பல கோடி ரூபாயை முறைகேடாக முதலீடு செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
2007-2008 ஆம் ஆண்டில் பாரதி சிமென்ட்ஸ், ஜகதி பப்ளிகேஷன்ஸ் மற்றும் கேரமல் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றில் சீனாவாசனால் செய்யப்பட்ட முதலீடுகள், ஆந்திர மாநிலத்தில் அப்போது ஆட்சியிலிருந்த ராஜசேகர ரெட்டி அரசிடமிருந்து இந்தியா சிமென்ட்ஸ் முறைகேடாக பெற்றதாகக் கூறப்படும் நன்மைகளுக்கான லஞ்சம் என்பது, அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.
இதுதொடர்பான வழக்கு, தெலுங்கானா ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது, ஆனால், தனக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி சீனிவாசன் இடைக்கால மனு தாக்கல் செய்தார். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, தங்கள் குற்றச்சாட்டில் உண்மையிருப்பதால், வழக்கை ரத்து செய்யக் கூாடது என வாதிட்டது.
இந்தியா சிமென்ட்ஸ் மூலம், ஜெகனின் நிறுவனங்களுக்கு ரூ .140 கோடி அளவுக்கு, முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன, இதில் சந்தேகம் உள்ளது. விதிகள் மீறப்பட்டுள்ளன என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஹைதராபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் ஆஜராகுவதற்கு விலக்கு கோரி சீனிவாசன் உயர் நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்தார். சீனிவாசனுக்கு, 75 வயது என்பதால், வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜராகுவது, கடினம் என்றும் வாதிட்டார். இருப்பினும், ஹைகோர்ட் அந்த வாதத்தை ஏற்கவில்லை. மேலும் விசாரணையை ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
2004 மற்றும் 2009க்கு இடைப்பட்ட காலத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்தபோது, முன்னாள் ஆந்திர மாநில அரசால் சில நிறுவனங்களுக்கு முறைகேடாக சலுகைகள் வாரி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் லஞ்சமாக, அந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் ஜெகன் மோகன் ரெட்டியின் தொழில்களுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.
சிபிஐயும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. சிபிஐ ஜெகனை கைது செய்து 2012ம் ஆண்டு மே 27 அன்று சிறையில் தள்ளியது. 16 மாத சிறைவாசத்திற்குப் பிறகுதான், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை ஜெகன் மோகன் ரெட்டி மறுத்து வருகிறார்.