கண்ணீர் மல்க பிரியாவிடை பெற்ற நரசிம்மன்..! உருக்கமான வழியனுப்பு நிகழ்வு ..!
Recommended Video
ஐதரபாத்: தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த நரசிம்மன் சொந்த ஊரான சென்னைக்கு புறப்படும் முன்பு, அவருக்கு உருக்கமான வழியனுப்பு விழா நடைபெற்றது.
தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த நரசிம்மனின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, அம்மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழிசை சவுந்தரராஜன். இதையடுத்து தனது சொந்த ஊரான சென்னைக்கு நரசிம்மனும் அவரது மனைவியும் நேற்று புறப்பட்டனர். அப்போது பேகம்பேட் விமான நிலையத்திற்கு சென்று நரசிம்மனுக்கு பிரியா விடை கொடுத்து வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்.
அதிக நாட்கள் ஆளுநர்
இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஆளுநராக இருந்தவர் என்ற வரலாற்று பெருமைக்கு சொந்தக்காரர் நரசிம்மன். ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த போது கடந்த 2009-ல் ஆளுநராக அவர் பதவியேற்றுக்கொண்ட நேரத்தில், தெலுங்கானாவை தனி மாநிலமாக்கக் கோரி கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை வலுவடைந்து ஆந்திரா முழுவதும் உச்சக்கட்ட பரபரப்பு நிலவிய நிலையில் அதனை லாவகமாக கையாண்டார் நரசிம்மன்.
ஒருங்கிணைந்த ஆந்திரா, தலைநகரங்கள் பிரிக்கப்படாத நிலையில் தெலுங்கானா-ஆந்திரா, மீண்டும் தெலுங்கானா என கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக ஐதரபாத் ராஜ்பவனில் தங்கி ஆளுநர் பொறுப்பை நிர்வகித்தார் நரசிம்மன்.
மூத்த சகோதரர்
ஆளுநர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நரசிம்மன் பற்றி கூறிய சந்திரசேகர் ராவ், அவரை தனது மூத்த சகோதரராகவே எண்ணியதாகவும், பல நேரங்களில் ஆலோசனைகள் கேட்டுள்ளதாகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய நரசிம்மன், மூத்தவர்களுக்கு மரியாதை, துயரத்தில் இருப்பவர்கள் மீது அக்கறை, மக்களுக்கு உண்மையாக இருத்தல் ஆகிய மூன்று நற்குணங்கள் சந்திரசேகர் ராவிடம் உள்ளதாக கூறியுள்ளார். இப்படி உருக்கமாக, நெகிழ்வாக நடைபெற்ற நிகழ்வை அடுத்து சிறப்பு விமானம் மூலம் நரசிம்மனை சென்னைக்கு வழியனுப்பி வைத்தது தெலுங்கானா அரசு.