விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என சொல்லவே இல்லை: அமித்ஷா
ஹைதராபாத்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விவசாயிகள் சாரைசாரையாக டெல்லியை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றனர்.
இவர்களை ஹரியானா, டெல்லி போலீசார் எல்லைகளில் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆனாலும் விவசாயிகளின் போர்க்கோலத்தை தடுக்க முடியவில்லை. இதையடுத்து மத்திய அரசும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்- காலிஸ்தான் தொடர்பு
இதனிடையே விவசாயிகளின் போராட்டத்தை காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புபடுத்தி ஹரியானா முதல்வர் மனோகர் லால் கூறியிருந்தது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
அரசியல் உள்நோக்கம் கொண்டது இல்லை
இந்நிலையில் ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது, விவசாயிகளின் போராட்டங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஒருபோதும் விமர்சிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு தயார்
விவசாயிகளின் பிரச்சனைகள் எதுவானாலும் அதனை தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் போராடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு சென்று சேர வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
அமித்ஷா நிபந்தனையால் வருத்தம்
ஆனால் பாரதிய கிஷான் யூனியனின் பஞ்சாப் பிரிவு தலைவர் ஜகஜித் சிங் கூறுகையில், நிபந்தனையுடன் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா அழைப்பு விடுத்தார். இது சரியான அணுகுமுறை இல்லை. திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா முன்வராதது வருத்தம் அளிக்கிறது. நாளை விவசாய சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றார்.