ஷியாம் எங்க வீட்டு சொந்தம்.. நாய்க்கு மேளதாளத்துடன் இ்றுதி ஊர்வலம்.. மக்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி
ஹைதராபாத்: ஷியாம் எங்க வீட்டு சொந்தம், எங்கள இப்படி தவிக்க விட்டு போய்ட்டானே என்று நாய் இறந்து போனதை எண்ணி கதறிய மக்கள், ஒன்று சேர்ந்து இறந்து போன நாயை மேளதாளத்துடன் இ்றுதி ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளார்கள். தெலுங்கானாவில் இந்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது
நாய் நன்றியுள்ள பிராணி., தன்னை வளர்க்கும் எஜமானர்களுக்காக உயிரையும் கொடுக்கும். இந்த விஷயங்களை நேரில் பார்த்தும் கேட்டும் இருப்போம். அப்படித்தான் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரில் உள்ள போயகாலி காலனியில் ஒரு நாயை ஷியாம் என பெயரிட்டு அந்த பகுதி மக்கள் பாசத்தோடு வளர்த்து வந்தனர்.
அந்த நாய் சிறுவயதில் இருந்தே போயகாலி காலனி மக்களின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தது. நாயை அந்த மக்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் போல் பாவித்து அன்பு செலுத்தினர். அந்த நாய் மிகவும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் வசித்து காலனிவாசிகளுக்கு 14 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்தது.
இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கிய நாய் காயம் அடைந்து நலிவடைந்தது. விபத்தில் காயம் அடைந்து பாதிக்கப்பட்ட நாய் ஷியாமை காலனி மக்கள் சிகிச்சைக்காக கால் நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் நாய் இறந்து போனது. தங்கள் குடும்ப உறுப்பினரில் ஒருவரை இழந்தது போல் கதறி துடித்த காலனிவாசிகளும், காலனியில் வசிக்கும் இளைஞர்களும் அந்த நாய்க்கு மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்தனர்.