திடீர் வெடிப்பு.. சிவப்பு புகை.. மருந்து கம்பெனியில் தீ விபத்து.. விசாகப்பட்டினத்தில் என்ன நடந்தது?
ஹைதராபாத்: ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து கம்பெனி ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீ விபத்தில் ஒரே ஒருவர் மட்டும் பலத்த காயம் அடைந்தார்.
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பரவாடா பகுதியில் இருக்கும் ஜெஎன் பார்மா சிட்டி தொழிற்சாலையில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைபிரிவு ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
முதலில் அங்கு பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வெடிப்பை தொடர்ந்து பெரிய அளவில் தொழிற்சாலை முழுக்க தீ பரவி உள்ளது.
விசாகப்பட்டினம் மருந்து கம்பெனியில் பயங்கர தீ விபத்து- தீயை அணைக்கும் பணி தீவிரம்
பெரிய புகை
இந்த தீ விபத்து காரணமாக அங்கு பெரிய அளவில் புகை மூட்டம் ஏற்பட்டது. சிவப்பு நிறத்தில் பெரிய அளவில் புகை பரவியது. அருகில் இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் இதனால் மூச்சுத்திணறலுக்கு உள்ளானார்கள். மருந்து தொழிற்சாலை என்பதால் மருந்து கலந்த புகை வெளியானது. இதனால் அருகாமையில் இருந்த சில பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஒருவர் காயம்
இந்த விபத்து சரியாக நேற்று இரவு 10.30 மணிக்கு ஏற்பட்டது. அதன்பின் தீயை அணைக்க அதிகாலை வரை தீயணைப்பு வீரர்கள் போராடி இருக்கிறார்கள். அங்கு தீ விபத்து ஏற்பட்ட போது 3 ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். இதில் 2 வீரர்கள் காயமின்றி காப்பாற்றப்பட்டனர். ஒரே ஒருவர் மட்டுமே காயத்துடன் மீட்கப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
|
தீயணைப்பு வீரர்கள்
இதையடுத்து உடனடியாக அந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டனர். மொத்தம் 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டது. வேகமாக 100க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொழிற்சாலையில் இருக்கும் சிஇடிபி எனப்படும் பிரிவில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.அந்த நேரத்தில் மழையும் பெய்த காரணத்தால் கொஞ்சம் மீட்பு பணி எளிதானது.
அணைப்பு
தொடர் போராட்டத்தை தொடர்ந்து இந்த தீ இன்று அதிகாலை மொத்தமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாகப்பட்டினத்தில் கடந்த சில வாரங்கள் முன் எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில் இதேபோல் வாயு கசிவு விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.