216 அடி உயரத்தில் இராமானுஜரின் சமத்துவத்துக்கான சிலை - பிப்.5ல் திறந்து வைக்கும் மோடி
ஹைதராபாத் அருகே ராமானுஜருக்கு, 216 அடி உயரத்தில் ரூ.1000 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
ஹைதராபாத்: வைணவ ஆச்சாரியரான இராமானுஜரின் ஐம்பொன்னால் ஆன 216 அடி உயர சிலையை வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இச்சிலையானது முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடைகளின் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ,1000 கோடி செலவில் உருவாக்கப்பட்டது என்பததோடு, உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய சிலை என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.
இராமானுஜர் சிலை அமைந்துள்ள வளாகத்தில், அவர் வாழ்ந்த ஆண்டுகளை நினைவுகூறும் வகையில் 120 கிலோ தங்கத்தால் ஆன கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவறை அமைந்துள்ள அறையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் பிப்ரவரி 13ஆம் தேதியன்று திறந்துவைக்க உள்ளார்.
விசிஷ்டாத்வைதம் என்னும் வைணவத் தத்துவத்தை பரப்பிய வைணவ ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களில் மிகவும் முக்கியமானவர் இராமானுஜர். கி.பி 1017ஆம் ஆண்டில் தோன்றி சுமார் 120 ஆண்டுகள் வரை வாழ்ந்து வைணவ தத்துவத்தை நாடு முழுவதும் பரப்பியவர். ஜாதி வேறுபாடுள் இன்றி அனைத்து தரப்பு மக்களையும் சரிசமமாக பாவித்து, தீண்டாமை கொடுமை ஒழிய பாடுபட்டவர். தான் பெற்ற எட்டெழுத்து மந்திரமான ஓம்நமோநாராயணாய என்னும் மந்திரத்தை உலக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தியவர்.
120 வயது வாழ்ந்த துறவி
தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரிர் பிறந்த இராமானுஜர் நாடு முழுவதும் யாத்திரையாக சென்று விசிஷ்டாத்வைத தத்துவத்தை பரப்பியவர். ஸ்ரீரங்கம் கோயிலில் பூஜை முறைகளை நெறிப்படுத்தி ஆலய நிர்வாகத்தையும், ஸ்ரீவைணவ மட நிர்வாகத்தையும் திறம்பட நடத்தி, தன்னுடைய 120ஆவது வயதில் அங்கேயே பரமபதம் அடைந்தார். அவரது பூதஉடலானது ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்திலேயே வைத்து பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ராமானுஜருக்கு திருமேனிகள்
ராமானுஜருக்கு அனைத்து வைணவ கோயில்களிலும் கற்சிலைகள், ஐம்பொன்னால் ஆன சிலைகள் இருந்தாலும், குறிப்பாக மூன்று திருமேனிகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அவை, தமர் உகந்த திருமேனி, தானுகந்த திருமேனி, தானான திருமேனி. இதில், கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள 'தமர் உகுந்த திருமேனி", தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் "தான் உகந்த திருமேனி", என இரண்டும் இராமானுஜரின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது. ஸ்ரீரங்கத்தில் உள்ள "தானான திருமேனி" என்பது இராமானுஜர் பரமபதம் அடைந்த உடன், அவரது பூத உடல் ஸ்ரீரங்கம் வசந்த மண்டபத்தின் அருகிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது.
216 அடி உயர பஞ்சலோக சிலை
தற்போது இராமானுஜருக்கு தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான ஷம்ஷாபாத்தில், சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் முழுக்க முழுக்க பக்தர்களிடம் வசூல் செய்யப்பட்டு, 216 அடி உயரத்தில் தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், பித்தளை என பஞ்சலோகம் எனப்படும் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ளது. சமத்துவத்துக்கான சிலை என சிறப்பு பெற்ற இச்சிலையானது மெல்கோட் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள இராமானுஜரின் கற்சிற்பங்களை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகக் குழுவில் உள்ள தோவானந்த இராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
இரண்டாவது மிகப்பெரிய சிலை
இச்சிலையை நிறுவுவதற்கான பணி 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில் சிலை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது சுமார் 90 சதவிகித பணிகள் முடிவடைந்துவிட்டன. ஐம்பொன்னால் ஆன இச்சிலையானது உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிலை என்னும் சிறப்பு பெற்றுள்ளது. தாய்லாந்து நாட்டில் சுமார் 302 அடி உயரமுடைய புத்தர் சிலை முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
என்னென்ன வசதிகள்
ஹைதராபாத்தின் புறநகர்பகுதியான ஷம்ஷாபாத்தில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில், 216 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிலையை வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று பிரதமர மோடி திறந்து வைக்கவுள்ளார். மேலும் இவ்வளாகத்தில், 108 திவ்யதேசங்கள், பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் தமிழ்த் துறவிகளின் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள வைணவ ஆலயங்கள் இடம்பெற்றுள்ளன.
120 கிலோ தங்கத்தால் ஆன கருவறை
இச்சிலை வளாகத்தில் பத்ரா வேதி எனப் பெயரிடப்பட்டுள்ள 54 அடி உயரமுள்ள அடித்தளக் கட்டிடம், டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், பழங்கால இந்திய நூல்களை உள்ளடக்கிய நூலகம், கல்விக் கூடம், தியேட்டர் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. இராமானுஜர் சிலை அமைந்துள்ள வளாகத்தில், அவர் வாழ்ந்த ஆண்டுகளை நினைவுகூறும் வகையில் 120 கிலோ தங்கத்தால் ஆன கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவறை அமைந்துள்ள அறையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் பிப்ரவரி 13ஆம் தேதியன்று திறந்து வைக்க உள்ளார்.