’பாக்யநகர்’.. பிரதமர் மோடியின் பேச்சால் சர்ச்சை.. ஹைதராபாத் பெயர்மாற்றம் செய்யப்படுகிறதா?
ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத் பெயரை பாக்யநகர் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் 19 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
"இன்னும் ஆறே மாசம் தான்.. எழுதி வைச்சுங்கோங்க!" ஷிண்டே அரசு தப்பாது.. காரணத்தை உடைக்கும் சரத் பவார்
நடப்பு ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், அடுத்த ஆண்டில் கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வியூகத்தை வகுப்பது, முதலமைச்சர் வேட்பாளர், இதர வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூடிய கூட்டணி யூகங்களை உடைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
அமித் ஷா பேச்சு
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவின் ராஜ்ஜியம் தொடரும். தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா ஆகியவற்றிலும், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாஜக விரைவில் ஆட்சியமைக்கும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று பேசினார்.
மோடி சர்ச்சை
இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் ஆட்சி தெலங்கானாவில் அமையும் போது வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்படும். தெலங்கானா விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில், தெலங்கானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் தொலைவு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ஹைதராபாத்தை பாக்யா நகர் என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். பாக்யநகரில் தான் சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைக்கும் "ஏக் பாரத்" என்ற வார்த்தையை உருவாக்கினார் என்று தெரிவித்தார். இதனால் ஹைதராபாத் நகரின் பெயர் மாற்றப்படுமா என்று கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பியூஷ் கோயல் பதில்
இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு அமைந்த பின் இதுகுறித்து அமைச்சர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் ஹைதராபாத் நகரத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
யோகியின் கோரிக்கை
முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டு ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஹைதராபாத் நகரத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.