தேசத்துக்காக என் மகன் உயிரை தியாகம் செய்ததால் பெருமை..ராணுவ அதிகாரி சந்தோஷ்பாபுவின் தாய் உருக்கம்
ஹைதராபாத்: தேசத்துக்காக என் மகன் உயிரை தியாகம் செய்ததை பெருமையாக கருதுகிறேன் என சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபுவின் தாயார் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.
லடாக்கின் கால்வின் (கல்வின்) பள்ளத்தாக்கில் சீனா நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனை இந்திய ராணுவம் உறுதி செய்திருக்கிறது.
இத்தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு தெலுங்கானாவை சேர்ந்தவர். தமது மகனின் உயிர் தியாகம் குறித்து சந்தோஷ்பாபுவின் தாயார் மஞ்சுளா கூறியதாவது:
தேசத்துக்காக என் ஒரே மகன் உயிர் தியாகம் செய்திருப்பது பெருமையாக இருக்கிறது. ஆனால் ஒரு தாயாக ஒரே மகனை இழந்த துயரத்தில் இருக்கிறேன்.
லடாக் எல்லையில் இந்தியாவின் பதிலடியில் 43 சீனா ராணுவ வீரர்கள் பலி- பலர் படுகாயம்
டெல்லியில் உள்ள என் மருமகளுக்கு நேற்று இரவே செய்தி கிடைத்திருக்கிறது. எங்களுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல்தான் தகவல் கிடைத்தது. நான் இளம்பிராயத்தில் ராணுவத்தில் சேர விரும்பினேன். அது நடக்கவில்லை.
என் கனவுகளை 15 ஆண்டுகால ராணுவ சேவையில் மகன் சந்தோஷ் பாபு நிறைவேற்றினார். இவ்வாறு மஞ்சுளா கூறினார்.