ஆபாச நடனம்.. கிளப்பில் 21 இளம்பெண்களை சுற்றி வளைத்த ஹைதராபாத் போலீஸ்..
ஹைதராபாத்: கிளப்பில் ஆபாச நடனமாடிய 21 இளம் பெண்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இளம்பெண்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது வீடியோ எடுத்த செய்தியாளர்கள் மீது இளம்பெண்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கிளப் ஒன்றில், இன்று காலை இளம்பெண்களை வைத்து ஆபாச நடன நடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், கிளப்பில் நடந்துகொண்டிருந்த ஆபாச நடனத்தை நிறுத்தி, நடனமாடிய 21 இளம்பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல்நிலையத்தில் வைத்து இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேளிக்கை விருந்து ஒன்றிற்காக தங்களை பிரசாத் என்பவர் கிளப்புக்கு அழைத்துவந்து ஆபாச நடனமாட வைத்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் வரும் தகவலை முன்னதாகவே அறிந்த கிளப் உரிமையாளர் மற்றும் விருந்து நடத்திய பிரசாத் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.
அப்போது காவல் நிலையத்துக்கு சென்ற பத்திரிகையாளர்கள் இளம் பெண்களை வீடியோ எடுத்தனர். இதனால் ஆவேசமடைந்த அந்த இளம்பெண்கள், தங்களை வீடியோ எடுக்கக்கூடாது என்று கூச்சல் போட்டு, கேமராக்களை உடைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் இளம்பெண்களை எச்சரித்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.