ஹைதராபாத்தில் பரவும் ‛க்யூ’ காய்ச்சல்.. கறிக்கடைக்கு போறீங்களா உஷார் மக்களே!என்ன செய்யும்? விபரம்
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 5 கறிக்கடைக்காரர்களுக்கு க்யூ காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் தற்போது புதிய காய்ச்சல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. ‛க்யூ' என அந்த காய்ச்சல் அழைக்கப்படும் நிலையில் ஆடு, மாடு உள்ளிட்ட பண்ணை விலங்குகளில் இருந்து மனிதர்களை தாக்குமாம். தற்போது தெலங்கானாவில் 5 கறிக்கடைக்காரர்களுக்கு ‛க்யூ' காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கறிக்கடைக்கு செல்லும் மக்கள் உஷாராக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ‛க்யூ' காய்ச்சல் எப்படி பரவும், இதில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பல நாடுகளுக்கு பரவ தொடங்கிய நிலையில் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்டுவிட்டது. கடந்த 2020, 2021 என 2 ஆண்டுகளாக இந்தியா உள்பட பல நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன.
இந்த கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகும் கூட புதிதாக பரவும் புதிய வைரஸ் சார்ந்த நோய்கள் மக்களை பாதிக்கின்றன. இந்நிலையில் தான் தற்போது அண்டை மாநிலமான தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் புதிதாக ‛க்யூ' காய்ச்சல் பரவி வருகிறதாம். இது என்ன? எப்படி பரவும் என்பது பற்றிய தகவல் வருமாறு:
வேகமெடுத்த கொரோனா.. மாற்று மருந்துகளால் கொத்துகொத்தாக பலியாகும் மக்கள்.. திணறும் சீனா.. சோகம்
5 பேருக்கு ‛க்யூ’ காய்ச்சல்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தற்போது ‛க்யூ' காய்ச்சல் பாதிப்பு மனிதர்களுக்கு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது வரை ஹைதராபாத்தில் 5 பேர் க்யூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 250 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் 5 பேருக்கு க்யூ காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மேற்கொண்டு க்யூ காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காய்ச்சலுக்கான காரணம் என்ன?
இந்த க்யூ காய்ச்சல் என்பது கோக்ஸியெல்லா பர்னெட்டி எனும் பாக்டீரியாவால் ஏற்படும். இந்த பாக்டீரியா வெள்ளாடு, செம்மறியாடு, மாடு போன்ற விலங்குகளிடம் இருக்கும். இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து இது மனிதர்களுக்கு பரவும். அதாவது கோக்ஸியெல்லா பர்னெட்டி பாக்டீரியா பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகள் வசிக்கும் இடத்தில் உள்ள தூசிகளை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு இந்த க்யூ காய்ச்சல் ஏற்படும்.
யாரை தாக்கும்?
பெரும்பாலும் பண்மை தொழிலாளர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், கறிக்கடைகாரர்கள் உள்ளிட்டவர்கள் தான் க்யூ காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அந்த வகையில் தான் தற்போது ஹைதராபாத்தில் 5 கறிக்கடைக்காரர்களுக்கு க்யூ காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாக கொண்டு இயங்கி வரும் தேசிய இறைச்சி ஆராய்ச்சி மையம் சார்பில் இறைச்சி கடைக்காரர்களிடம் சீரோலாஜிக்கல் சோதனைகள் நடத்திய நிலையில் 5 பேருக்கு க்யூ காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அறிகுறிகள் என்ன?
இந்த க்யூ காய்ச்சலுக்கு பல்வேறு அறிகுறிகள் உள்ளன. காய்ச்சல், குளிர் அல்லது வியர்வை, சோர்வு, தலைவலி, தசைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மார்புவலி, வயிற்றுவலி, எடை குறைதல், இருமல் உள்ளிட்டவை க்யூ காய்ச்சலுக்கான பொதுவான அறிகுறியாகும். பொதுவாக கோக்ஸியெல்லா பர்னெட்டி பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக எந்த மாற்றமும் தெரியாது. மாறாக 2 அல்லது 3 வாரங்களுக்கு பிறகு நோயின் தாக்கம் அதிகரிக்கும். அப்போது தான் அவர்கள் பிரச்சனையை சந்திப்பார்கள்.
மோசமான பாதிப்பு ஏற்படுமா?
இதனால் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டியது கட்டாயமாகும். இதில் அலட்சியம் காட்டும் பட்சத்தில் க்யூ காய்ச்சல் பாதிப்பு என்பது உடல்நலனை அதிகமாக பாதிக்கலாம். அதாவது நுரையீரல், கல்லீரலில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
பயப்பட வேண்டுமா?
மேலும் இந்த காய்ச்சல் மேற்கொண்டு பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி ஹைதராபாத் மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஹைதராபாத் மாநகராட்சியின் கால்டை பிரிவு தலைமை அதிகாரி கூறுகையில், ‛‛இறைச்சிக்கடைக்காரர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்றார். இருப்பினும் கூட பொதுமக்கள் கறிக்கடைகள், மற்றும் இறைச்சி கூடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருப்பது அவசியம் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.