ஹைதராபாத் என்கவுண்டரில் பெரும் சந்தேகம்.. 4 பேர் உடலுக்கும் மீண்டும் பிரேத பரிசோதனை: ஹைகோர்ட் அதிரடி
ஹைதராபாத்: பெண் டாக்டர் பலாத்கார சம்பவத்தில், போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட, 4 பேரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தெலுங்கானா ஹைகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதை விசாரித்த ஹைகோர்ட், தனியார் மருத்துவர் குழு ஒன்றை டெல்லியிலிருந்து வரவழைத்து, 4 பேர் உடலுக்கும் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் நவம்பர் 27ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் மொத்தம் நான்கு பேரை குற்றவாளிகள் என கூறி கைது செய்திருந்தனர்.
அவர்களை குற்றம் நடந்த இடத்துக்கு கடந்த 6ம் தேதி போலீசார் அழைத்துச் சென்று தடயங்களை சேகரித்தனர். அப்போது அவர்கள் தப்பியோட முயன்றதாக கூறி, 4 பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இந்த என்கவுண்டர் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இதை தொடர்ந்து ஏழு பேர் கொண்ட, உண்மை கண்டறியும் குழுவை, என்கவுண்டர் நடைபெற்ற இடத்துக்கு கடந்த 7ம் தேதி அனுப்பி வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நாலு பேரின் உடல்களும் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உடல்களை மனித உரிமை ஆணையத்தின் குழு நேரடியாக சென்று ஆய்வு செய்தது.
இந்த நிலையில், 4 பேரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தெலுங்கானா ஹைகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதை விசாரித்த ஹைகோர்ட், தனியார் மருத்துவர் குழு ஒன்றை டெல்லியிலிருந்து வரவழைத்து, 4 பேர் உடலுக்கும் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 4 பேர் உடல்களும், இன்னும் கூட அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.