சி.ஏ.ஏ, என்.ஆர்.சிக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்- பாஜக மீது கேசிஆர் பாய்ச்சல்!
ஹைதராபாத்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் (சிஏஏ), என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆருக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா சட்டசபையில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றின.
அப்போது, தெலுங்கானா சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கானா சட்டசபையில் இன்று சி.ஏ.ஏ., என்.ஆர்.சி மற்றும் என்பிஆருக்கு எதிராக தீர்மானத்தை தாக்கல் செய்தார் சந்திரசேகர ராவ்.
போராடும் மக்கள்
இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய சந்திரசேகர ராவ், நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை. அவர்களால் பெற்றோரின் பிறப்பு சான்றிதழ்களை தர இயலாது. ஆகையால் என்.பி.ஆர் வேண்டாம் என எதிர்க்கிறோம். மத்திய அரசு என்.பி.ஆரை நிறைவேற்ற விரும்புகிறது. ஆனால் மக்கள் இதற்கு எதிராக பல்வேறு சந்தேகங்களை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசத்தின் பிரச்சனை?
சகிப்புத்தன்மையற்ற போக்கை இந்த நாடு ஒருபோதும் ஏற்காது. என்.ஆர்.சியை அமல்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை என்.பி.ஆர். என்று மத்திய உள்துறை அமைச்சகம்தான் கூறியது. இப்போது யார் சொல்வதை உண்மை என ஏற்பது? இந்துக்களா? முஸ்லிம்களா என்பது பிரச்சனை அல்ல.
சட்டசபையும் தேசதுரோகியா?
இந்த தேசத்தின் எதிர்காலம் தொடர்பான பிரச்சனை. எதை செய்தாலும் பாகிஸ்தான் ஏஜெண்ட்- தேசத்துரோகி என முத்திரை குத்தும் போக்கு அதிகரித்துள்ளது. அப்படியானால் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றும் தெலுங்கானா சட்டசபையும் தேசதுரோகம் செய்கிறதா? அப்படித்தான் முத்திரை குத்தப் போகிறார்களா?
எது குடியுரிமை சான்று?
டொனால்ட் டிரம்ப் இந்திய வருகையின் போது வடகிழக்கு டெல்லியில் 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது. கோலி மாரோ- துரோகிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள் என்று அமைச்சர்களும் எம்பிக்களும் முழங்குகின்றனர்.. என்ன மாதிரியான முழக்கம் இது? நாகரிகமான ஒரு சமுதாயத்தில் இப்படியான முழக்கங்களை அனுமதிக்க முடியும்? குடியுரிமை ஆதாரத்துக்கு வாக்காளர் அடையாள அட்டை செல்லாது- ஆதார் அட்டை செல்லாது- ரேஷன் கார்டு செல்லாது- லைசென்ஸ் செல்லாது எனில் எதுதான் செல்லும்? இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.