அடடா.. இது சூப்பராருக்கே.. குழந்தைகளை படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ரூ.15000: அசத்தும் ரெட்டிகாரு!
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு 15000 ரூபாய் நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.
4 துணை முதல்வர்களுடன் 25 பேர் கொண்ட அவரது அமைச்சரவை கடந்த சனிக்கிழமை பதவியேற்றது. இந்த அமைச்சரவை இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றி அமைக்கப்படும் என ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.
ஆந்திர அமைச்சரவை கூட்டம்
இந்நிலையில் ஆந்திர மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அமைச்சர்களுக்கு எச்சரிக்கை
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஊழல் இல்லாத மாநிலமாக ஆந்திர மாநிலம் இருக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் அமைச்சர்கள் தவறு செய்தாலும், ஊழல் முறைகேடு புகார்கள் வந்தாலும் அவர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதோடு, பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குழந்தைகளை படிக்க வைத்தால் நிதி
மேலும் ஆந்திர மாநிலத்தில் படிக்க வேண்டிய வயதில் எந்த குழந்தையும் கூலி வேலைக்கு செல்லக்கூடாது என்றும், அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு 15000 ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி 26ஆம் தேதி முதல்
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைத்தாலும் சரி தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தாலும் சரி அவர்களுக்கு நிதி வழங்கப்படும் என்றார். இது பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் வரும் ஜனவரி 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
மக்களை கவரும் திட்டங்கள்
மக்கள் பயன்படுத்தும் வகையில் தரமான ரேஷன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு சமூக ஆர்வலர்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே அனுப்பப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடர்ந்து மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பெரும் வரவேற்பு
கடந்த வாரம் விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை அறிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும் முடிவு செய்துள்ளார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.