இந்தியா வந்தாச்சு ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் v.. அடுத்து கிளினிக்கல் டிரையல் ஆரம்பம்
ஹைதராபாத்: கொரேனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் தள்ளாடிய நிலையில், ரஷ்யா 'ஸ்புட்னிக்-V' என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் உலக சுகாதார அமைப்பு, மற்றும் மேற்கத்திய உலக நாடுகள் ரஷியாவின் தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பின. நம்பகத்தன்மை இல்லை என்றும், 3வது டிரையல் நடக்கவில்லை என்றும் குற்றம்சாட்டின.
இதற்கிடையில்தான் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அது 90 சதவீத பாதுகாப்பானது என அறிவித்தது.
பொருளாதாரம் மோசமாக போய் கொண்டு இருக்கிறது.. 4 விஷயங்களை பின்பற்றுங்கள்.. ப.சிதம்பரம் சொல்லும் யோசனை
92 சதவீதம் வெற்றி
இந்த அறிவிப்பு சில நாட்கள் முன்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, ஸ்புட்னிக்-V தடுப்பூசி, 92 சதவீதம் அளவுக்கு பயன் அளிக்கிறது என்று ரஷ்யா அறிவித்தது. 3ம் கட்ட பரிசோதனையில் 20 ஆயிரம் பேருக்கு ஒரு டோஸ் கொடுக்கப்பட்டதாகவும், 14 நாட்கள் இடைவெளியில் 16 ஆயிரம் பேருக்கு இரண்டு டோஸ் கொடுக்கப்பட்டதாகவும் அதன்பின் கொரோனா பாசிட்டிவ் நபர்கள் 20 பேருக்கு வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாகவும், இதில் 92 சதவீதம் பயன் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா வருகை
இந்த நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசி இன்று இந்தியா வந்தது. ஹைதராபாத்திலுள்ள டாக்டர்.ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு மருந்துகள் வந்து சேர்ந்துள்ளன. அவை குறிப்பிட்ட வெப்ப நிலையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கிளினிக்கல் டிரையல்களை டாக்டர்.ரெட்டிஸ் ஆய்வகம் நடத்த உள்ளது. அப்போது பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பரிசோதிக்கப்படும்.
கிளினிக்கல் டிரையல்
ஆர்டிஐஎப் 10 கோடி டோஸ்வழங்கும். கடந்த செப்டம்பர் மாதம் கிளினிக்கல் டிரையல் மற்றும் இந்த தடுப்பு மருந்து சப்ளைக்கு ஒப்பந்தம் செய்தது டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம். ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஸ்புட்னிக் V தடுப்பூசி விநியோகம் ஆகியவற்றில் இணைந்து செயல்படும் என்று ஆர்.டி.ஐ.எஃப் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
10 கோடி டோஸ்கள்
மொத்தம் 10 கோடி ஸ்புட்னிக் V தடுப்பூசி டோஸ்களை டாக்டர் ரெட்டீசுக்கு ஆர்.டி.ஐ.எஃப் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.