ஓர் ஆண்டாக பூட்டி வைக்கப்பட்ட கடையில் எலும்புக்கூடு... ஹைதரபாத்தில் பரபரப்பு
ஹைதராபாத்: ஓர் ஆண்டாகப் பூட்டி வைக்கப்பட்ட கடை ஒன்றில் மனித மண்டை ஓடும், எலும்புக்கூடும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா தலைவர் ஹைதராபாத்திலுள்ள வழிபாட்டுத் தளம் ஒன்றுக்குச் சொந்தமான கடையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பர்னிச்சர் கடை அப்பகுதியுள்ள ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமையாளர் கடந்த ஓர் ஆண்டாகக் கடையைப் பூட்டியே வைத்துள்ளார். மேலும், வாடகையையும் முறையாகச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த வழிபாட்டுத் தளத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், கடையை சுத்தம் செய்து, வேறொரு நபருக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சுத்தம் செய்யக் கடையை திறந்தபோது, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
சுத்தம் செய்ய கடையை திறந்து உள்ளே சென்றபோது, ஒரு மரப்பெட்டியில் மனித மண்டை ஓடும், சில எலும்பு துண்டுகளும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஹைதராபாத் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தற்போது கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.