அமித் ஷா டேபிளுக்கு வந்தாச்சு ஃபைல்.. இந்திய குடியுரிமையை இழக்கிறார்கள் சோனியா, ராகுல்- சு.சாமி
ஹைதராபாத்: அகில இந்திய காங்கிரஸ் குழுவின் தற்காலிகத் தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி விரைவில் இந்தியாவின் குடியுரிமையை இழக்கக்கூடும், ராகுல் காந்திக்கும் அதே கதி ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில், பாஜக மாணவர் அமைப்பான, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஏற்பாடு செய்த, "சிஏஏ - சமகால அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு வரலாற்று கட்டாயம்" என்ற தலைப்பிலான, கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளராக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது சு.சாமி கூறியதாவது: இந்த கோப்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேஜையில்தான் உள்ளது, விரைவில் சோனியா காந்தி அவரின், இந்திய குடியுரிமையை இழப்பார். இந்திய குடிமகனாக இருக்கும்போது, வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றால், தானாகவே தங்கள் இந்திய குடியுரிமையை இழக்க நேரிடும்.
ராகுல் காந்தி இங்கிலாந்தில் தொழில் தொடங்க பிரிட்டிஷ் குடியுரிமையை பெற்றுள்ளார். எனவே அவருக்கும் இந்திய குடியுரிமையை இழக்கும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம், ராகுல் காந்தி குடியுரிமைக்காக புதிதாக விண்ணப்பிக்கலாம். ஏனெனில் அவரது தந்தை ராஜீவ் காந்தி ஒரு இந்தியர். ஆனால் அவர் தனது தாய் சோனியா காந்தியின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி இந்திய குடியுரிமைக்கு, விண்ணப்பிக்க முடியாது, ஏனெனில் சோனியா ஒரு இந்திய குடிமகள் அல்ல.
சிஏஏ சட்டம், மக்களால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை, அதை எதிர்ப்பவர்கள் கூட இந்தச் சட்டத்தை படித்துப் பார்க்கவில்லை. இந்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்படப் போவதில்லை. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து வரும் முஸ்லிம்களுக்கும், குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வாதிடுவது நகைப்புக்குரியது. இவ்வாறு சு.சாமி தெரிவித்தார்.