விவசாயிக்கு டிராக்டர்...காய்கறி விற்ற பட்டதாரி பெண்ணுக்கு வேலை...அசத்தும் சோனு சூட்!!
ஐதராபாத்: கொரோனாவால் வேலையிழந்து குடும்பத்தைக் காப்பாற்ற காய்கறி விற்று வந்த தெலங்கானாவைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கு நடிகர் சோனு சூட் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக ஆந்திராவில் விவசாயி ஒருவருக்கு இலவசமாக டிராக்டர் வழங்கி இருந்தார்.
தெலங்கானாவில் வாரங்கல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் உன்தாதி சாரதா. இவர் தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். எம்என்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். வயது 26. பணிக்கு சேர்ந்த மூன்று மாதங்களில் கொரோனா காரணமாக தனது வேலையை இழந்தார். குடும்பத்துக்கு வேறு வருமானம் இல்லை.
கம்ப்யூட்டர் இன்ஜினியரை காய்கறி விற்க வைத்துவிட்டதே கொரோனா.. அசரவில்லை சாரதா.. சபாஷ்
தந்தையுடன் காய்கறி விற்பனை
இந்தச் சூழலில் தனது தந்தையுடன் காய்கறிகள் வாங்கி தனது தந்தையுடன் ஸ்ரீநகர் காலனியில் சாரதா விற்று வந்தார். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து, தனது தந்தையுடன் மார்க்கெட் சென்று காய்கறிகளை வாங்கி வந்து, 12 மணி நேரம் காய்களை விற்று வந்தார்.
உதவ ட்விட்டரில் வேண்டுகோள்
இதுகுறித்து ரிட்சி ஷெல்சன் என்பவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். தனது பதிவில், ''விர்சுசாகார்ப் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சாரதா என்பவர் சமீபத்தில் வேலையை இழந்து விட்டார். குடும்பத்தைக் காப்பாற்ற காய்கறி விற்று வருகிறார். அவருக்கு உதவ வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார். அந்தப் பதிவில் சோனு சூட்டை டேக் செய்து இருந்தார்.
இண்டர்வியூ முடிந்தது
இதற்கு பதில் அளித்து இருந்த சோனு சூட், ''என்னுடைய அலுவலர் சாரதாவை சந்தித்துள்ளார். இண்டர்வியூ செய்துள்ளார். வேலை வாய்ப்புக்கான ஆர்டர் அனுப்பப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
போலி கவுரவம் வேண்டாம்
இதற்கு பதில் அளித்து இருந்த சாரதா, ''எனக்கு எந்த மாதிரியான வேலை வாய்ப்பு என்பது குறித்து என்னிடம் கூறவில்லை. கடுமையான சோதனை நாட்களில் போலி கவுரவம் இல்லாமல் வாழக் கற்றுக் கொண்டேன். இதில் அவமானப்படுவதற்கு ஒன்றும் இல்லை. கவுரவமாக எப்படி உயிர் வாழ்வது என்பதுதான் கேள்வியே'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏரில் மகள்களை பூட்டிய விவசாயி
வேலை வாய்ப்பு அளித்த சோனு சூட்டிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதற்கு முன்னதாக, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏர் உழுவதற்கு மாடு வாங்க பணம் இல்லாததால் விவசாயி ஒருவர் தனது இரு மகள்களையும் ஏரில் பூட்டி உழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அந்த விவசாயிக்கு சோனு சூட் டிராக்டர் வாங்கிக் கொடுத்தார். இந்த செய்தியும் வைரலானது. இந்த சூழலில் தற்போது சாரதாவுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார்.