நிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு
ஹைதராபாத்: சரக்கு மற்றும் சேவை வரிகள் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் என்றும் நிதி அமைச்சர் பதவிக்கு நிர்மலா சீதாராமனை விட நரசிம்மராவே தகுதி வாய்ந்தவர் என்றும் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே வரி என்பதுதான் இதன் நோக்கம்.
இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சேவை வரிக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பாஜக எம்பி ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி
அவர் வேறு யாருமில்லை. மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமிதான். ஹைதராபாத்தில் பிரக்னாபாரதி சிந்தனையாளர் பேரவை அமைப்பு சார்பில் 2030-க்குள் இந்தியா பொருளாதார வல்லரசு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு பேசினார்.
ஜிஎஸ்டி
பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியை அவர் கடுமையாக விமர்சித்தனர். அவர் கூறுகையில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்காக அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும். இந்தியா அவ்வப்போது 8 சதவீத பொருளாதார வளர்ச்சி கண்டிருந்தோம்.
சரக்கு சேவை வரி
எனினும் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. முதலீட்டாளர்களை வருமான வரியின் பெயராலும் 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனமான சரக்கு, சேவை வரியின் பெயராலும் பயமுறுத்த வேண்டாம். சரக்கு, சேவை வரி மிகவும் சிக்கலானது. எந்த படிவத்தை நிரப்ப வேண்டும் என யாருக்கும் தெரியவில்லை.
பதிவேற்றம்
எனவே அவர்களுக்கு கணினி தேவைப்படுகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மின்சாரமே இல்லாத நிலையில் எப்படி கணினியில் பதிவேற்றம் செய்வது? என கேட்கிறார்கள். நான் கூறினேன் உங்கள் மண்டையில் பதிவேற்றம் செய்து கொண்டு பிரதமரிடம் போய் சொல்லுங்கள் என்றேன். இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ச்சி பெற வேண்டும்.
Recommended Video
அமெரிக்கா
இந்த நிலை ஏற்பட்டால் நிச்சயம் நாம் சீனாவை முந்துவோம் என்பதில் சந்தேகமே இல்லை. அடுத்த 50 ஆண்டுகளில் முதலிடத்திற்கு சென்று அமெரிக்காவிற்கே சவால் விடலாம். நிர்மலா சீதாராமனை காட்டிலும் நரசிம்மராவ் நிதி அமைச்சர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர். ஆனால் என்ன காரணத்தாலோ அவர் நிதி அமைச்சராக ஆக்கப்படவில்லை என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.