தமிழிசை தெலுங்கானா ஆளுநரானதில் போலீஸ்காரர்களுக்கு ரொம்ப ஹேப்பி! ஏன் தெரியுமா?
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில ஆளுநரானதும் முந்தைய ஆளுநர் நரசிம்மன் பின்பற்றிய ஒரு பழக்கத்தை மாற்றியுள்ளார், தமிழிசை சவுந்தரராஜன். இதனால் காவல்துறையினர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
2009ம் ஆண்டு.. அப்போது நரசிம்மன் ஆளுநரான புதிது. தினசரி, கைராதபாத் பகுதியில் உள்ள அனுமார் கோவில், அல்லது வேறு ஏதாவது ஒரு கோவிலுக்கு கிளம்பி செல்வதை வழக்கமாகவைத்திருந்தார், நரசிம்மன். இதனால் தினசரி ஜீரோ டிராபிக் வசதி செய்து கொடுத்து ஆளுநரை கோவில் வரை அழைத்து சென்றுவிட்டு, மீண்டும் ராஜ்பவன் அழைத்து வரும் பணி காவல்துறையினருக்கு.
தினசரி இப்படி டிராபிக் பிரச்சினையானதால், பொதுமக்களும் நரசிம்மனின் தினசரி கோவில் பயணங்களுக்கு அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தனர். காவல்துறையினரும்தான்.
அனுமார் கோவில்
அப்போது ஒரு சீனியர் போலீஸ் அதிகாரி ராஜ்பவனுக்கு ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பினார். அதில், "ராஜ்பவனுக்கு உள்ளேயே, ஒரு அனுமார் கோவிலை கட்டிவிடலாம். இதனால் ஆளுநர், அங்கேயே தரிசனம் செய்து கொள்வார். தினமும் ஆளுநர் வெளியே வரும்போது அவருக்கு பாதுகாப்பு வழங்குவது காவல்துறையினருக்கு கஷ்டமான பணியாக உள்ளது" என்று தெரிவித்திருந்தார். இதற்கு, "நீங்கள் பாதுகாப்பு வழங்குவதை மட்டும் பாருங்கள்" என்று ராஜ்பவனில் இருந்து, பதில் வந்ததாம்.
கோவில் தரிசனங்கள்
இதன்பிறகு, ஒரு தசாப்தம் வரை, இப்படித்தான், தெலுங்கானாவில் தினமும் ஆளுநர் கோவிலுக்கு போவதும், போலீசார் பாதுகாப்புக்கு முன்னும், பின்னும் அணிவகுத்து போவதுமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. ஏனெனில், புதிய ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், ஆன்மீக நம்பிக்கை அதிகம் கொண்டவர் என்றபோதிலும், தினசரி கோவிலுக்கு செல்லும் வழக்கம் இல்லாதவர்.
பிடித்தது, பிடிக்காதது
தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம் செய்யப்படுவதாக, தகவல் வெளியானதுமே, அம்மாநில காவல்துறையினர், தமிழிசையின் தினசரி பழக்க வழக்கங்கள், அவருக்கு பிடித்தது, பிடிக்காதது என அனைத்து தொடர்பாகவும், ஒரு குட்டி ஆய்வே செய்தார்களாம். அப்போதுதான், தமிழிசை தினசரி கோவிலுக்கு செல்லும் வழக்கம் இல்லாதவர் என்பதையும் அறிந்து கொண்டனர்.
போலீஸ் தகவல்
"தமிழிசை தொழில்முறை மருத்துவர். அவர் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்தான், என்றாலும், தினசரி கோயில்களுக்கு செல்வதில் அவருக்கு பழக்கம் இல்லை. மருத்துவர்கள் பொதுவாக இந்த வகையான பழக்கம் கொண்டிருக்க மாட்டார்கள். ஒருமுறை சுற்றுப் பயணம் செய்தால், பல முக்கியமான கோயில்களுக்கு சென்று வருவார் என்று நாங்கள் அறிந்து கொண்டோம்," என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நரசிம்மன் ஒவ்வொரு நாளும் கோயில்களுக்கு வருகை தரும் ஒரே ஆளுநராக இருந்திருப்பார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மக்கள் தொடர்பு
"நரசிம்மனை போலல்லாமல், தமிழிசை பல ஆண்டுகளாக அரசியல்வாதியாக இருந்து வருகிறார், பொதுமக்களுடனான அவரது தொடர்புகள் எப்போதும் அவரது நிகழ்ச்சி நிரலில் முதலிடத்தில் உள்ளன. ராஜ்பவனுக்கு, அரசியல் மற்றும் வேறுவழியில் அவரை சந்திக்க ஏராளமானோர் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் ஒரு நல்ல பேச்சாளர் ஆவார், எனவே அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்பார், என்று எதிர்பார்க்கிறோம்" என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.