இந்தியா-ஆஸி “ஃபைனலில்” தமிழிசை.. முன்னாள் கேப்டன் அசாருதீனுடன் போட்டோ! தேசிய கொடி பிடித்து “சியர்”
ஐதராபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 வது மற்றும் கடைசி டி20 போட்டியை நேரில் காண தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனை இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜாருத்தீன் வரவேற்றார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா அடுத்தடுத்த ஆட்டமிழக்க விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் சூர்ய குமார் யாதவ்.
பழைய ரணங்கள் மறக்குதே! ஸ்கையின் “வானவேடிக்கை”.. முதுகெலும்பாக கோலி -“மோதலுக்கு” பின் மீண்டும் சரவெடி
கோலி - சூர்யா அபாரம்
விராட் கோலி விக்கெட்டுகள் விழுவதை கட்டுப்படுத்தி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் ஆடினார். சூர்யகுமார் யாதவ் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசி ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய கோலி கடைசி ஓவரில் சிக்சரை விளாசி வெற்றிக்கு வித்திட்டார். 48 பந்துகளை சந்தித்த அவர், 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 63 ரன்களை குவித்தார்.
தமிழிசை சவுந்திரராஜன்
இந்த போட்டியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சென்று பார்த்து ரசித்தார். இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், "தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா 20-20 கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்தேன்.
வாழ்த்துக்கள்
மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை வென்று நம் தாய் திருநாட்டிற்கு பெருமை சேர்த்த நம் இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தங்களது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை வெற்றி பெறச் செய்த வீரர்கள் சூர்யகுமார் யாதவ், விராட் கோலி மற்றும் அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அழைத்த அஜாருத்தீன்
போட்டியை காண நேரில் அழைப்பு விடுத்த ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜாருத்தீன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கும் அவர், தேசியக் கொடியுடன் ரசிகர்கள் அமரும் பகுதிக்கு சென்ற நிற்கும் படத்தை பகிர்ந்து உள்ளார்.