எதுவும் தேறாது.. எக்குத்தப்பான தோல்வி கன்பர்ம்ட்.. தெலுங்கானாவில் பேக் அடிக்கும் சந்திரபாபு நாயுடு!
ஹைதராபாத்: தோல்வி பயத்தினால் தெலுங்கானா மாநிலத்தில் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று செய்திகள் வருகின்றன. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற முதல் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (TRS) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
சந்திர சேகர ராவின் ஆட்சி காலம் நடைபெறவுள்ள மக்களவையோடு முடிவடைய இருந்த நிலையில் சந்திர சேகர ராவ் முன்னதாகவே ஆட்சியை கலைத்து முன்னதாகவே தேர்தலை சந்தித்தார் அதிலும் பெருவெற்றி பெற்றது சந்திர சேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. 119 இடங்களில் 100 இடங்களை வென்று மிருக பலத்தோடு ஆட்சியமைத்தது.
செந்தில்பாலாஜியை நெஞ்சில் கை வைத்து நிறுத்திய டி.எஸ்.பி.. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியோடு போட்டியிட்ட சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியால் 13 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தெலுங்கானாவில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் மொத்த இடங்கள் அல்லது 16 இடங்களை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெல்லும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
கருத்துக் கணிப்புகள் இப்படி வெளியாகிக் கொண்டிருக்க தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து முக்கிய தலைகள் எல்லாம் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர். முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் மட்டுமல்லாது வேட்பாளர்களும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் கம்மம் தொகுதி வேட்பாளருமான நாகேஸ்வர ராவ் சில நாட்களுக்கு முன்னர் டி.ஆர்.எஸ்.சில் இணைந்தார். அவரை தொடர்ந்து பலரும் இங்கிருந்து டி.ஆர்.எஸ்.சுக்கு தாவி வருகின்றனர்.
வேட்பாளர்களும் முக்கிய நிர்வாகிகளும் கட்சித் தாவி வரும் நிலையில் இடது சாரிகளுடன் கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடு முயற்சித்தார். அதுவும் பலிக்கவில்லை. அவர்களும் நடிகர் பவன் கல்யாண் தொடங்கியுள்ள ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து விட்டனர். இதனால் தெலுங்கு தேசம் தெலுங்கானாவில் தனித்து விடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அறிவிக்கப்பட்டுள்ள 17 வேட்பாளர்களில் எத்தனை பேர் மிஞ்சுவார்கள் என்று தெரியாத சூழலில் அப்படியே போட்டியிட்டாலும் படு தோல்வி உறுதி என்ற சூழலே நிலவி வருவதை சந்திரபாபு உணர்ந்துள்ளார். எனவே தெலுங்கு தேசம் தெலுங்கானா மாநிலத்தில் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடாது என்ற முடிவை நோக்கி நகருவதாக கூறப்படுகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் இந்த நிலை குறித்து தெலுங்கானா மாநிலத் தலைவர் ராமண்ணா கூறுகையில் நாளை தங்களது முடிவை அறிவிக்க உள்ளதாகவும் அதே வேளையில் காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். நாளை கட்சியின் முடிவை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கையில் போட்டியில்லை என்று அறிவித்தால் கடந்த 1982 -ம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக போட்டியில்லை என்ற முடிவை தெலுங்கு தேசம் எடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. தோல்வி பயம் காரணமாக சந்திர பாபு இப்படி ஒரு முடிவை எடுப்பது அவரது அரசியல் வாழ்வில் ஒரு பெரிய சறுக்கலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் வரும் காலம் இதை சறுக்கல் என்று பதிவு செய்யப் போகிறதா அல்லது சாதுரியம் என்று பதிவு செய்யப் போகிறதா என்பது அவர் ஆந்திராவில் பெறும் வெற்றிப் பொருத்தும் மாறுபடலாம்.