ஓடிப்போன மனைவி.. 'மன்மதன்' பாணியில் 16 பெண்களை அடுத்தடுத்து கொன்ற கொடூரன் மைனா ராமுலு! பகீர் தகவல்
ஹைதராபாத்: மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப்போனதால் ஆத்திரம் அடைந்த மைனா ராமுலு என்ற கொடூரன், பெண்கள் என்றால் மோசமானவர்கள் என்று நினைத்துக்கொண்டு அடுத்தடுத்து 16 பெண்களை கொன்றுள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை சீரியல் கில்லர் மைனா ராமுலு மீது 16 கொலை உள்பட 21 வழக்குகள் உள்ளதாக ஹைதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்சனி குமார் தெரிவித்தார். இந்த கொடூர கொலையாளியை ராச்சகொண்டா போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்சனி குமார் இந்த கொலையாளி பற்றி கூறுகையில், " கடந்த ஜனவரி 1ம் தேதி ஹைதராபாத்தில் வசிக்கும் காவலா அனாதையா, ஜூபிலி ஹில்ஸ் போலீசில் வந்து டிசம்பர் 30 முதல் தனது மனைவி வெங்கடம்மா (50) காணாமல் போனதாக புகார் அளித்தார்.
போலீசார் தேடுதல்
இதையடுத்து டிசம்பர் 30ம் தேதி காலை 8 மணிக்கு. காணாமல் போன வெங்கடம்மாவை , கண்டுபிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக தேடினர். கட்கேசர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அங்க்காப்பூர் கிராமத்தின் ரயில் பாதையின் அருகே ஜனவரி 4 ஆம் தேதி, வெங்கடம்மாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
4 கொள்ளை
இந்த கொலையை மைனா ராமுலு என்பவர் செய்தது உறுதியானது. இவர் மீது இதுவரை 16 கொலை வழக்குகள், 4 கொள்ளை வழக்குகள், போலீஸ் ஸ்டேசனில் இருந்து தப்பியது என 21 வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
ஓடிப்போன மனைவி
கொடூர கொலையாளி ராமுலு தெலுங்கானாவின் சங்க ரெட்டி மாவட்டமான காந்தி மண்டலத்தின் ஆருத்லா கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். அவருக்கு 21 வயதாக இருந்தபோது, அவரது பெற்றோர் ராமலுவுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் ஒரு குறுகிய காலத்திற்குள், அவரது மனைவி வேறொரு நபருடன் ஓடிவிட்டார். இதனால் பெண்களுக்கு எதிராக ஒரு கோபத்தை ஏற்படுத்திக் கொண்ட ராமுலு, பெண்களை தொடர்ச்சியாக கொலை செய்யத் தொடங்கினார். 2003 முதல், இதுவரை 16 பெண்களை கொலை செய்துள்ளார். அடுத்தடுத்து கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளார்.
மனநல பாதிப்பு
முதல்முறையாக கைது செய்யப்பட்டபோது ராமுலுவுக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம், பிப்ரவரி 21, 2011 அன்று, ஆயுள் தண்டனையும், ரூ .500 அபராதமும் விதித்தது.
மத்திய சிறைச்சாலை செர்லப்பள்ளியில் ஆயுள் தண்டனையை ராமுலு அனுபவித்து வந்தார். ஆனால் அவர் டிசம்பர் 1, 2011 அன்று சிகிச்சைக்காக எர்ராகடாவின் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மீண்டும் கொலைகள்
பின்னர், டிசம்பர் 5 ஆம் தேதி நள்ளிரவில் இரவில் ராமுலுவுடன் ஐந்து கைதிகள் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பினர். இதையடுத்து அப்போதே ராமுலு உள்பட, தப்பித்த கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தப்பித்த பின்னர் ராமுலு தொடர்ந்து கொலைகளை செய்தார். போவன்பள்ளி காவல் நிலையம் (இரண்டு வழக்குகள்), சாந்தா நகர் காவல் நிலையம் (இரண்டு வழக்குகள்) மற்றும் டண்டிகல் காவல் நிலையம் (ஒரு வழக்கு). என அவர் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2013ம் ஆண்டு மே 13 அன்று போவன்பள்ளி போலீசாரால் ராமலு கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்குப் பின்னர், தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராமலு. நீதிமன்ற உத்தரவின் பேரில் 2018ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இரண்டு பெண்கள்
ஆனால் சிறையில் இருந்து வந்த பின்பும் ராமுலு தனது குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சிறையில் இருந்து வந்த பின்னரும் இரண்டு பெண்களை கொலை செய்துள்ளார். ஷமிர்பேட்டை காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண் மற்றும் பதஞ்சேரு காவல் நிலையத்தில். மற்றொரு பெண்ணை அவர் கொலை செய்தார். இந்த வழக்கில், நீதிமன்றக் காவலில் இருந்த ராமுலு செர்லாப்பள்ளி மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வந்தார்.
பெண்ணுடன் உல்லாசம்
பின்னர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அன்று, பாலா நகரில் (சைபராபாத்) ஒரு இளம் பெண் ராமுலுவிடம் மாட்டிக்கொண்டார். மது அருந்தி, உல்லாசம் அனுபவிக்கலாம் என்று பணம் கொடுத்து அழைத்துச் சென்று என முலுகு அருகே ஜப்தா சிங்யபள்ளி என்ற கிராமத்தில் சேலையிலேயே கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார். இறந்த பெண்ணிடம் இருந்து வெள்ளி கொலுசு மற்றும் நகைகளை திருடிவிட்டு தப்பினார் இதேபோல் டிசம்பர் இறுதியில் மாயமான வெங்கடம்மாவை ராமுலு கொன்றது உறுதியானது.
போலீசார் அதிர்ச்சி
இதையடுத்து ஹைதராபாத் கட்கேசர் போலீசார், அங்குஷாபூர் ரயில் பாதை, கட்கேசர் வரை அனைத்து இடங்களிலும் சுமார் 500 சிசிடிவி காட்சிகளை சரிபார்த்ததில் ராமுலு தான் கொன்றார் என்பதை உறுதி செய்தனர். அவரை கட்கேசர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்" இவ்வாறு கூறினார் 16 பெண்களை கொனற் மைனா ராமுலுவால் ஹைதரபாத்தில் பெரும் .அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.