விளக்கு ஏற்ற மட்டும்தானய்யா பிரதமர் சொன்னாரு? அதுக்காக இத்தனை அக்கப்போரா சாமிகளா?
டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்றுதான் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ஆனால் நமது பொதுமக்களோ அதற்கு அப்பால் நடத்திய நிகழ்வுகள் அனைத்தும் கேலிக்கூத்தான சம்பவங்களாகத்தான் இருந்தன.
Recommended Video
கொரோனா லாக்டவுன் நடைமுறையில் இருக்கும் நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பொதுமக்கள் மின்விளக்குகளை அணைத்து 9 நிமிட நேரம் அகல் விளக்குகளை ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.
அதேநேரத்தில் இந்த விளக்கேற்றுதலை முன்வைத்து வினோத நிகழ்வுகளும் நடைபெற்றன. லாக்டவுனுக்கு எதிராக தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் தெருக்களில் ஒன்று கூடி விளக்குகளை ஏற்றினர். இன்னமும் பலர் இடைவிடாது பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
|
Go Corona ஊர்வலம்
லாக்டவுன் காலத்தில்தான் காற்று மாசு இல்லாமல் இருக்கிறதே என நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில் நேற்று இரவு ஒரேயடியாக பட்டாசுகளை வெடித்து அதை சீர்குலைத்தனர். பலர் மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியபடி Go Corona என முழக்கமிட்டபடி தெருக்களில் ஊர்வலமும் நடத்தினர். இந்த ஊர்வலத்தை போலீசாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.
|
சாமி ஊர்வலம் போல...
இதேபோல உத்தரப்பிரதேசத்தின் ஆசம்காரிலும் ஒரு Go Corona பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தாரை தப்பட்டைகள் தூள் பறந்தன. சின்னஞ்சிறுசுகள் முதல் பெருசுகள் வரை பெருந்திரளாக பங்கேற்று Go Corona என முழக்கங்கள் எழுப்பியபடி நகர்வலம் வந்தன. ஏதோ ஒரு சாமி ஊர்வலம் போல Go Corona ஊர்வலத்தை உ.பி. மக்கள் கொண்டாடி தீர்த்த கொடுமையும் நடந்தது.
|
China Virus Go back ஊர்வலம்
தெலுங்கானாவில் பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங், நடத்திய தீப்பந்த ஆர்ப்பாட்டமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஹைதராபாத்தில் தமது ஆதரவாளர்களுடன் ஒன்று திரண்ட ராஜா சிங், கையில் தீபந்தத்தை பிடித்தபடி Go back Go back China Virus Go back என கொரோனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இந்த வீடியோதான் இப்போது ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
|
கொரோனா கொடும்பாவி
வட இந்தியாவில் ஒருநகரில் இன்னொரு கூத்தும் நடந்தது. கொரோனாவுக்கு பாடை கட்டி இறுதி ஊர்வலம் நடத்தினர். பாரத் மாதா கீ ஜே என்ற கோஷங்களுடன் அண்ணன் கொரோனா கொடும்பாவி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டார். அவரை எதிர்த்து கோஷங்கள் முழக்கமிடப்பட்டன. இந்த ஊர்வலத்தின் முடிவில் அண்ணன் கொரோனாவின் கொடும்பாவியை எரித்து மகிழ்ந்தனர் பாரத் மாதா கீ ஜே முழக்கத்தினர்.
|
ஓடிப்போ ஓடிப்போ கொரோனாவே ஓடிப்போ
வட இந்தியாதான் என்று இல்லை.. நம்ம தமிழகத்திலும் கூட ஓடிப்போ கொரோனா என்ற முழக்கத்துடன் ஊர்வலத்தை இருட்டில் நடத்தியுள்ளனர் தேசபக்தர்கள். கையில் தீப்பந்தங்கள், மெழுகுவர்த்தி ஏந்தியபடி கொரோனா ஏதோ பக்கத்தில் வந்துவிட்டதைப் போல நினைத்து கொரோனா ஓடிப் போ கொரோனா ஓடிப் போ என கூவிவந்தது இந்த கூட்டம்.
|
பற்றி எரிந்த குப்பை கிடங்கு
இத்தனை ஊர்வலங்களுக்கு மத்தியில் சில ஆர்வக்கோளாறுகள் பட்டாசுகளையும் வெடித்து கொரோனா ஒழிப்பு நாளாக கொண்டாடினர். இப்படி பட்டாசு வெடித்ததால் சென்னை எர்ணாவூரில் குப்பை கிடங்கு ஒன்று பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுவிட முடியாமல் பெரும் துன்பத்துக்குள்ளாகினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதேபோல் பட்டாசுகளால் பல இடங்களில் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் நடைபெற்றன. இதில் வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. இரு சக்கர வாகனங்களும் கருகி சாம்பலான கொடுமை நிகழ்ந்தது.